ஐஎஸ்ஐஎஸ் வெறித்தனம்... 23 குர்து மக்களை சுட்டுப் படுகொலை செய்து அராஜகம்
பெய்ரூட்: சிரியாவின் கொபேன் நகர் அருகே 23 குர்து இன மக்களை வரிசையாக நிற்க வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள். இவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகல் ஆவர்.
கொபேன் நகருக்கு அருகே ஒரு கிராமத்தில் இந்த வெறிச்செயல் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து சிரிய மனித உரிமைக் கண்காணிப்பகம் கூறுகையில், பர்க் புடான் என்ற கிராமத்தில் புகுந்த தீவிரவாதிகள் 23 பேரை நிற்க வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். இவர்களில் பலர் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடி வந்தவர்கள் ஆவர்.
வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் குர்திஷ் படையுடன் 2 தற்கொலைப் படையினர் கார் மூலமும் குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினர் என்று அது கூறியுள்ளது.
சிரிய நகரான கொபேன், துருக்கி எல்லையையொட்டி உள்ளது. இங்குதான் குர்து இன மக்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்தப் பகுதியை தீவிரவாதிகளிடமிருந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் உதவியுடன் கடந்த ஜனவரி மாதம் குர்துப் படையினர் கைப்பற்றினர். குர்து பிராந்தியமாகும் இது.
ஆனால் கூட்டுப் படையினர் இன்று அப்பகுதியிலிருந்து விலகிச் சென்றதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.