இந்தியர்களுக்கு இஷ்திஷாதி பயிற்சி அளிக்கும் ஐஎஸ்: எதற்கு தெரியுமா?
பாரீஸ்: பாரீஸில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இஷ்திஷாதி என்ற முறைப்படி பயிற்சி பெற்றவர்கள். இஷ்திஷாதி என்றால் சாகும் வரை போராட்டம் என்று அர்த்தம்.
பாரீஸில் நடந்த தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். தாக்குதல்களை நடத்திய தீவிரவாதிகள் இஷ்திஷாதி என்ற முறைப்படி பயிற்சி பெற்றவர்கள். இஷ்திஷாதி என்றால் சாகும் வரை போராட்டம் என்று அர்த்தம். இஷ்திஷாதி என்ற வார்த்தையை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் இஷ்திஷாதி தாக்குதல் முறை லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் ஃபிதாயீன் முறையைப் போன்று உள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரும் இந்தியர்களுக்கு தீவிரவாதிகள் இஷ்திஷாதி முறைப்படி தான் பயிற்சி அளித்து வருகிறார்கள். வெளிநாடுகளில் தாக்குதல் நடத்த தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே இஷ்திஷாதி முறைப்படி பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனால் இஷ்திஷாதி பற்றி இந்தியா கவலைப்பட வேண்டி உள்ளது.
பாரீஸில் தாக்குதல்கள் நடத்திய தீவிரவாதிகளுக்கும் இஷ்திஷாதி முறைப்படி பயிற்சி அளிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இம்முறைப்படி பயிற்சி அளிக்கப்படுபவர்களுக்கு வெடிகுண்டுகள் அடங்கிய கவசம், ஏகே 47 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் அளிக்கப்படுகிறது. இஷ்திஷாதி தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள் முதலில் கையெறி குண்டை பாதுகாப்பு படையினர் இருக்கும் திசை நோக்கி வீசுவார்கள். மக்கள் கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவார்கள். அதன் பிறகு இறுதியில் தங்கள் உடலில் கட்டியுள்ள வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வார்கள்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கல்யாணைச் சேர்ந்த ஷாஹீன் தான்கி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த நான்கு இந்திய வாலிபர்களில் ஒருவர். அவர் இஷ்திஷாதி முறைப்படி பயிற்சி பெற்றவர். அவருக்கு 4 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 26/11 அல்லது பாரீஸ் தாக்குதல் போன்று இந்தியாவில் தாக்குதல் நடத்தவே அவர்களுக்கு இஷ்திஷாதி முறைப்படி பயிற்சி அளிக்கப்படுவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஷ்திஷாதி மற்றும் ஃபிதாயீன் முறைகள் ஒன்று தான் என்கிறார்கள் அதிகாரிகள். லஷ்கர் இ தொய்பா, தாலிபான் தீவிரவாதிகள் ஃபிதாயீன் என்று கூறும் முறையைத் தான் அல் கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இஷ்திஷாதி என்கிறார்கள்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரும் அனைத்து இந்தியர்களுக்கும் இஷ்திஷாதி முறைப்படி பயிற்சி அளிப்பது இல்லை. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. ஷாஹீனுடன் சேர்ந்து கல்யாணைச் சேர்ந்த ஆரீப் மஜீதுக்கும் அந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.