இந்த 70 யு.எஸ். வீரர்களை பார்த்த இடத்தில் கொலை செய்யுங்கள்: பட்டியல் வெளியிட்ட ஐஎஸ்ஐஎஸ்
லண்டன்: சிரியாவில் தீவிரவாதிகளின் இடங்கள் மீது குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 70 பேரை கொலை செய்யப் போவதாக ஐஎஸ்ஐஎஸ் ஹேக்கர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளனர்.
சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் இடங்களை குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தி வரும் அமெரிக்க ராணுவத்தினரை கொன்று பழிவாங்கப் போவதாக இங்கிலாந்துடன் தொடர்புடைய ஐஎஸ்ஐஎஸ் ஹேக்கிங் பிரிவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அவர்கள் அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்டோரை கொலை செய்யப் போவதாக தெரிவித்துள்ளனர். அந்த பட்டியலில் பெண்களும் அடக்கம். அவர்கள் தாங்கள் கொலை செய்யப்போகும் ராணுவ வீரர், வீராங்கனைகளின் பெயர்கள், வீட்டு முகவரி, புகைப்படங்கள் ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளனர்.
ஹேக்கர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
ஐஎஸ்ஐஎஸ் தோழர்களே பட்டியலில் உள்ள ராணுவ வீரர், வீராங்கனைகளை எங்கு பார்த்தாலும் அதே இடத்தில் கொலை செய்யுங்கள், அவர்களின் வீட்டுக் கதவை தட்டி அவர்களின் தலையை துண்டாக வெட்டுங்கள், குத்திக் கொலை செய்யுங்கள், முகத்தில் சுடுங்கள், குண்டு வைத்து கொல்லுங்கள்.
இங்கிலாந்தின் பாதுகாப்பு துறையில் எங்கள் ஆள் உள்ளார். விரைவில் பல ரகசியங்களை வெளியிட உள்ளோம். இங்கிலாந்து விமானப்படையில் யார் யார் ஆளில்லா விமானங்களை இயக்குகிறார்கள் என்பதை கண்டுபிடிப்போம்.
அமெரிக்க ராணுவத்தினர் ஐாய்ஸ்டிக் மற்றும் கன்சோல்ஸை வைத்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க முடியும். அதற்காக நீங்கள் அழியப் போகிறீர்கள். உங்கள் ராணுவத்திற்கு துணிவே இல்லை. உங்கள் அதிபருக்கும் துணிச்சல் இல்லை. அதனால் தான் ஆயிரக் கணக்கான மைல் தொலைவில் இருந்து கொண்டு பட்டன்களை அழுத்தி எங்களுடன் போராடுகிறீர்கள்.
லண்டனில் தங்கி பாதுகாப்பு அமைச்சகத்திடம் நெருங்கிப் பழகி பெற்ற தகவல்களை எங்கள் சகோதரர்கள் அனுப்பி வைத்துள்ளனர். அதை நாங்கள் அடுத்த முறை வெளியிடுவோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.