'கே' என்பதால் 4 ஆண்களை மாடியில் இருந்து தள்ளிக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்
ராக்கா: சிரியாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 4 ஆண்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 5 அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் தாக்குதல் நடத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஓரினச்சேர்க்கைக்கு எதிரானவர்கள். இந்நிலையில் சிரியாவில் உள்ள தேர் ஈஸ்ஸோர் நகரில் 4 ஆண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்தது தீவிரவாதிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து ஓரினச்சேர்க்கையில் இனி யாரும் ஈடுபடாத வண்ணம் இருக்கும் வகையில் அந்த 4 பேரையும் தண்டிக்க தீவிரவாதிகள் முடிவு செய்தனர்.
தீவிரவாதிகள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட அந்த 4 பேரையும் பிடித்து 5 அடுக்குமாடி கட்டிடத்தின் மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்த 4 பேரின் கை, கால்களை கட்டி அவர்களின் கண்களில் துணியை கட்டினர். பின்னர் 4 பேரையும் ஒவ்வொருவராக தூக்கி கீழே வீசினர். 4 பேரும் தரையில் விழுந்து பலியாகினர்.
இந்த கொடூர சம்பவத்தை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். முன்பும் கூட பல ஓரினச்சேர்க்கையாளர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்.
இந்த மாத துவக்கத்தில் ஓரினச்சேர்க்கையாளர் ஒருவரை தீவிரவாதிகள் அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சியில் இருந்து தள்ளி கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.