ஸ்டார்ட் ஆகாத கார்… கோடாரியால் கொத்தி எடுத்த உரிமையாளர்!
இத்தாலி: கார் ஸ்டார்ட் ஆகாவிட்டால் நம் ஊரில் தள்ளி விடச்சொல்வார்கள். ஆனால் புத்தம் புது கார் ஸ்டார்ட் ஆகவில்லை என்று ஒரு இடம் கூட விடாமல் கோடாரியால் கொத்தி எடுத்துவிட்டார் ஒருவர்.
இத்தாலியைச் சேர்ந்த ஸ்பார்டாகோ கேப்பன் என்பவர். ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட்ன்ட்டாக வேலை செய்கிறார் ஸ்பார்டாகோ. சில தினங்களுக்கு முன் வழக்கம்போல் அலுவலகம் செல்வதற்காக காரை ஸ்டார்ட் செய்தார். கார் மக்கர் செய்யவே, செம டென்ஷனாகிவிட்டார்.
உடனே கடுப்பான ஸ்பார்டாகோ கேப்பன், உள்ளே சென்று கோடரியை எடுத்துவந்து, ‘இனிமே மக்கர் பண்ணுவியா... பண்ணுவியா?' என்று காரை கொத்தி எடுத்துவிட்டார். கார் அலங்கோலமாகவே இதைப் பார்த்த பொதுமக்கள், போலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர்.
இதற்கு முன்பு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி அலுவலகத்துக்குச் சென்று வந்தாராம் ஸ்பார்டாகோ. பலமுறை அலுவலகத்துக்குத் தாமதமாக வந்ததற்காக கண்டிக்கப்பட்டவரான அவர், அன்று தனது சீனியரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டிருக்கிறார். எனவே லேட்டாகிவிட்டால் எனது சுப்பீரியரின் கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்குமே என்பதால், அவருக்கு கோபம் வந்துவிட்டது. எனவேதான் கொத்திவிட்டார் கொத்தி.
பிரியமானவர்களிடம்தானே நமது கோபத்தைக் காட்ட முடியும்! அதுதான் இப்படி நடந்து கொண்டேன்!'' என்று போலீஸில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் ஸ்பார்டாகோ. இப்போது, மனநல சிகிச்சை மையத்தில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
பாவம் தன்னுடைய ஓனர் வீட்டு வாசலில், பலவித வெட்டு கீறல்களுடன் பரிதாபமாக நின்றுகொண்டிருக்கிறது ஃபியட் 500 கார்.