நெஞ்சை உறைய வைக்கும் இத்தாலி நிலநடுக்கம்...தோண்ட தோண்ட சடலங்கள்.. எமர்ஜென்சி பிரகடனம்!!
ரோம்: இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 250க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தோண்ட தோண்ட சடலங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதனால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் எமர்ஜென்சியை அறிவித்துள்ளது இத்தாலி அரசு.
இத்தாலி நாட்டில் நோர்சியா என்ற நகரை மையமாக கொண்டு புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவாகி இருந்தது. பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுமார் 80 முறை லேசான அதிர்வுகளும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சின்னாபின்னாகி போயுள்ள இந்த இடங்களில் இருந்து தோண்ட தோண்ட சடலங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் என 250க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சடலங்கள் கிடைத்துக் கொண்டே இருப்பதால் இறப்பின் எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இத்தாலி நாட்டு பிரதமர் மேட்டியோ ரென்சி எமர்ஜென்சியை பிரகடனப்படுத்தியுள்ளார். மேலும் நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய வீடுகள் கட்ட 4,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் வீட்டை இழந்தவர்கள் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள் என்றும் இத்தாலி பிரதமர் அறிவித்துள்ளார். நில நடுக்கத்தால் பாதிக்காத வகையிலான தொழில் நுட்பத்தில் வீடுகள் கட்டவும் உத்தரவிட்டுள்ளார்.
அமட்ரைஸ், அர்குவேட்டா, அக்குமோலி, பெஸ்கரா டெல் டிரோடோ ஆகிய நகரங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அமட்ரைஸ் நகரித்தில் மட்டும் 200 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.