டோக்கியோவை உலுக்கிய 5.4 ரிக்டர் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை.. உயிரிழப்பும் இல்லை
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.4 அலகாக பதிவாகியுள்ளது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பெரிய அளவிலான சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. அதேசமயம், டோக்கியோவிலும், பிற பகுதிகளிலும் நிலநடுக்கத்தை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
ஜப்பானில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 முறை சராசரியாக 5.7 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த ஒரு மாதத்தில் 55 முறையும் கடந்த வருடத்தில் மட்டும் 742 முறையும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள ஹோஸ்னு பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.4 அலகாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சுமார் 47 கிலோமீட்டர் ஆழத்தில், ஜப்பான் நேரப்படி காலை 11.47 மணிக்கு நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை இல்லை என்று அமெரிக்க புவியியல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நான்கு நிலத்தட்டுக்களின் மேல்தான் ஜப்பான் தீவு அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நிலநடுக்கம்தான். சிறியதும், பெரியதுமாக பல நிலநடுக்கங்களைப் பார்ப்பது ஜப்பான் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறி விட்டது குறிப்பிடத்தக்கது.