சேட்டை செய்த மகனை கொண்டு போய் காட்டில் விட்ட பெற்றோர்... வினோத தண்டனையாம்!
டோக்கியோ: ஜப்பானில் தவறு செய்த மகனுக்கு வினோத தண்டனை தருவதாக நினைத்து, அவனை கோடூரமான விலங்குகள் சுற்றித் திரியும் அடர்ந்த காட்டில் பெற்றோரே விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் வடக்கு ஒகாய்டோ மாகாணத்தைச் சேர்ந்த பெற்றோர் சமீபத்தில் தங்களது 7 வயது மகனைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்தனர். கரடிகள் உள்ளிட்ட கொடூர மிருகங்கள் உள்ள காட்டில், காய்கறிகளைப் பறிக்கச் சென்றபோது அச்சிறுவன் காணாமல் போனதாக அவர்கள் போலீசில் தெரிவித்தனர்.
ஆனால், முன்னுக்குப் பின் முரணாக பேசிய பெற்றோரின் பேச்சால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அச்சிறுவனைப் பெற்றோரே காட்டில் விட்டுச் சென்றது தெரிய வந்தது.
சுட்டித்தனமான தனது மகனுக்கு தண்டனை தருவதாக கருதி, இவ்வாறு அவர்கள் செய்துள்ளனர். சிறுவனை வனப்பகுதியில் இறக்கி விட்டுச் சென்ற, ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, அவனைக் காணவில்லை. இதனால் போலீசில் அவர்கள் பொய்ப் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து சிறுவனின் தந்தை கூறும் போது ‘எனது மகன் படுசுட்டியாக இருந்தாலும், அவனை தைரியமிக்கவனாகவும் ஒழுக்கம்மிக்கவனாகவும் வளர்ப்பதே எனது லட்சியம். எனது மகனுக்கு இருக்கும் பயத்தை போக்குவதற்காக தான் அவனை காரிலிருந்து இறக்கி வனத்தில் விட்டு வந்துவிட்டோம்' எனத் தெரிவித்துள்ளார்.
பெற்றோரின் பதிலால் அதிர்ச்சி அடைந்த போலீசார், 130 பேர் கொண்ட மீட்புபடையினருடன் ஹெலிகொப்டர்களில் காட்டிற்கு சென்று சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.