வேற்றுமையில் ஒற்றுமைதான் கனடாவின் வெற்றி ரகசியம்... பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ பெருமிதம்!
ஆடவா(கனடா): கனடா நாட்டின் 150வது பிறந்த நாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப் பட்டது. நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. நள்ளிரவு தாண்டியும் நகர மையப்பகுதிகளில் மக்கள் வெள்ளம் கரை புரண்டோடியது.
தலைநகர் ஆடவா வில் காலை 9 மணிக்கு கொண்டாட்டங்கள் ஆரம்பமானது. இசை நிகழ்ச்சிகள், பொது மக்கள் பங்கேற்பில் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. பன்னிரண்டு மணிக்கு மேல் 21 குண்டு முழங்க அணிவகுப்பு நடைபெற்றது. விமானப்படை விண்ணில் சாகசங்கள் செய்தனர்.
தொடர்ந்து கனடிய பிரபலங்கள் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாலை 8 மணிக்கு மேல் கனடிய கலைஞர்கள் பங்கேற்பில் சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இரவு 11 மணிக்கு பிரம்மாண்டமான வாணவேடிக்கையுடன் விழா நிறைவு பெற்றது. நகரம் முழுவதும் பஸ், ரயில்களில் கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதி இருந்தது. நகர மையப்பகுதியில் கார்களின் நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
மழை பெய்த காரணத்தால் நிகழ்ச்சி சற்று தாமதமாக தொடங்கினாலும் கூட்டத்திற்கு குறைவில்லை. எதிர்பார்த்த அளவுக்கும் அதிகமாக மக்கள் திரளாக வந்திருந்தார்கள். இலவசமாக உணவு வழங்கப்பட்டது. பிரத்தியேக பார்பெக்யு (Barbeque)ஏற்பாடு செய்யப்பட்டு சுடச்சுட பரிமாறப்பட்டன.
கவர்னர் ஜெனரல் டேவிட் ஜான்ஸ்டன், பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ,அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் விழாவில் பங்கேற்றனர். வேல்ஸ் இளவரசர் சார்லஸ் அவருடைய மனைவி கார்ன்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இளவரசர் சார்லஸ் பேசும் போது மனித உரிமையை பேணிக்காப்பதில், கனடா உலகின் முதன்மையான நாடாகும். உலக அமைதியை நிலைநாட்டுவதற்கு எப்போதுமே கனடா தலைமை சேவகனாக இருந்து வருகிறது. மற்ற நாடுகளுக்கு உதாரணமாக விளங்கும் ஒரு மிகச் சிறந்த நாட்டின் 150வது பிறந்த நாளை நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம் என்று கூறினார்.
பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் பேச்சில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிரம்பி வழிந்தது. நாட்டின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை அவருடைய பேச்சில் வெளிப்பட்டது. ஆங்கிலம் மற்றும் ஃப்ரெஞ்ச் மொழிகளில் உரையாற்றினார்.
'150 ஆண்டுகால வரலாறு நமது பாரம்பரியத்தையும், நிகழ்காலத்தையும் பிரதிபலிக்கின்றன.நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்காக நம்மை மீண்டும் ஒரு முறை உறுதிமொழி எடுக்கவும் இந்த விழா வழிவகுத்துள்ளது.. கனடா 150 ஆண்டுகால வரலாறு மட்டும் கொண்டது அல்ல. அதற்கும் மேலான முந்தைய பாரம்பரியம் கொண்டது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இங்கே மக்கள் வாழ்ந்து வந்தார்கள். வணிகம் செய்தார்கள், ஒருவரை ஒருவர் சந்தித்து காதல் கொண்டார்கள், ஒன்றாக குடும்பம் நடத்தினார்கள். ஒன்றாக போராடினார்கள்.
வலிமையான மக்கள் குடியிருப்புகளை உருவாக்கினார்கள். தங்கள் குடும்பத்தினருக்காகவும் அக்கம்பக்கத்து நண்பர்கள் , உறவினர்களுக்காவும் கடுமையாக உழைத்தார்கள்.
இங்கேயே வசித்து வந்த பூர்வக்குடிமக்கள், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் மற்றும் கனடாவில் பிறந்த குடிமக்கள் என அனைவரும் ஒன்றாக உழைத்து உருவாக்கிய தேசம் தான் கனடா. சாமானிய கனடிய மக்களும் அசாதாரண சாதனைகளை நடத்திக் காட்டுகிறார்கள்.
இங்கே யாரும் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாகவோ, மத நம்பிக்கை இல்லாதவர்களாகவோ இருக்கலாம். உலகின் எந்த இனத்தைச் சார்ந்தவராகவும் இருக்கலாம். எந்த மொழி பேசுபவர்களாகவும் இருக்கலாம். யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம். திருமணம் செய்து கொள்ளலாம். பல இன , மொழி, நம்பிக்கை கொண்டவர்களின் சங்கமம் தான் கனடா. அவரவர் விருப்பப்படும் வாழ்க்கை நெறியிலேயே வாழலாம்.
பன்முகம் கொண்ட கனடிய மக்களின் ஒற்றுமை தான் கனடாவின் பலம்.
வேற்றுமையில் ஒற்றுமை தான் கனடாவின் வெற்றிக்கு தாரக மந்திரம். உலகின் அனைத்து தரப்பு மக்களையும் கனடா வரவேற்கிறது. பன்முகத்தோடு தொடர்ந்து பயணிப்போம். நாட்டு மக்கள் அனைவருடனும் நானும் கனடாவின் 150 வது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறேன்' என்று உரையாற்றினார்.
கனடாவின் மாகாண தலைநகரங்கள் மற்றும் அனைத்து நகரங்களிலும் தலைநகரைப் போல் 150வது நாள் கொண்டாட்டங்கள் களை கட்டி இருந்தது. நகரின் மையப்பகுதிக்கு இலவச பேருந்து, ரயில் பயணங்கள், பார்பெக்யு உணவுகள், இசை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை என நள்ளிரவு தாண்டியும் மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
-இர தினகர், கனடாவிலிருந்து
படங்கள் : சிபிசி கனடா