6 வாரத்திற்குப் பிறகு வெளியே வந்த "குழந்தை"....!
பியாங்யாங், வட கொரியா: கடந்த 6 வாரமாக காணாமல் போயிருந்த வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், மீண்டும் வெளியுலகில் தலை காட்டியுள்ளார்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குடியிருப்புப் பகுதிக்கு கிம் வந்து போனதாகவும், வட கொரிய இயற்கை எரி சக்தி அறிவியல் கழகத்திற்கு வந்ததாகவும் வட கொரிய மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 6 வாரமாக கிம் எங்கு போனார் என்று தெரியாமல் இருந்து வந்தது. அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றும் செய்திகள் வெளியாகின. அவர் சீரியஸாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து வட கொரிய அரசு வழக்கம் போல வாயைத் திறக்காமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது கிம், வெளியில் வந்துள்ளார். இதுகுறித்து வட கொரிய மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வட கொரிய இயற்கை எரிசக்தி அறிவியல் கழகத்திற்கு கிம் வந்தபோது, அங்குள்ள விஞ்ஞானிகளைப் பாராட்டிப் பேசியுள்ளார் கிம். அப்போது அவர் கூறுகையில், நமது விஞ்ஞானிகள் தேச பக்தர்கள். தங்களது வாழ்க்கையை நமது நாட்டின் வலிமைக்காகவும், பிரகாசத்திற்காகவும் தியாகம் செய்தவர்கள் என்று கூறியுள்ளார்.
கிம் அங்கு வந்தபோது கையில் கோலூன்றியபடி நடந்து வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக ஒரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கிம் உடல் நலம் குன்றியிருப்பது உறுதியாகியுள்ளது. அவருக்கு காலில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
செப்டம்பர் 3ம் தேதிதான் கடைசியாக கிம் வெளியுலகில் காணப்பட்டார். அதன் பின்னர் தற்போதுதான் அவர் வெளியே வந்துள்ளார்.
இருப்பினும் எப்போது இந்த புதிய விசிட்டை கிம் மேற்கொண்டார் என்பது தெரியவில்லை. 31 வயதாகும் கிம் உடல் பருமன் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் அவதிப்படுவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.