டிரம்பை பின்பற்றும் குவைத்.. பாக்.உள்பட 5 இஸ்லாமிய நாடுகளுக்கு விசா வழங்கத் தடை
பாகிஸ்தான், சிரியா உள்பட இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 5 நாடுகளுக்கு விசா வழங்க குவைத் அரசு தடை விதித்துள்ளது.
குவைத்: அமெரிக்கா வழியில் குவைத்தும் பாகிஸ்தான் உள்பட இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 5 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஈரான், ஈராக், சிரியா, சூடான், லிபியா, ஏமன் மற்றும் சோமாலியா ஆகிய 7 இசுலாமிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வர தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். டிரம்பின் அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த அறிவிப்புக்கு எதிராக உலகின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடந்து வருகிறது. அமெரிக்க அதிபரின் இந்த முடிவுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் குவைத்தும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிரியா, ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நாடுகளில் இருந்து வருவோர் யாரும் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் குவைத் அரசு கேட்டுக் கொண்டு உள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் அகதிகள் போர்வையில் உள்ளே நுழைந்துவிடலாம் அவர்களது ஊடுருவலைத் தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.