விமானியின் கண்களில் பாய்ந்து பார்வையை பறித்த லேசர் - தரையிறக்கும் போது விபரீதம்!
லண்டன்: லண்டனின் பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு சொந்தமான விமானம் தரையிறங்கும் போது காக்பிட் பகுதியில் இருந்து விமானியின் கண்களில் மிகவும் வீரியமான லேசர் கற்றை ஒன்று ஊடுருவியதால் அவருடைய கண்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக அந்த விமானி வடக்கு இங்கிலாந்தின், ஷெப்பீல்ட்டில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் இச்சம்பவம் ஏற்பட்டது.
"அவருடைய ஒரு கண்ணின் கருவிழி லேசர் கற்றையால் எரிந்துவிட்டது" என்று பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரான ஜிம் மக்ஸ்லான் தெரிவித்துள்ளார்.
"இது போன்ற நிகழ்வால் ஒருவரின் பார்வையே பாதிக்கப்பட்டுள்ளது எங்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விமானிகளுக்கு எதிரான லேசர் கதிர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் வருத்தமடைந்துள்ளார்.
ஏற்கனவே இரு ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்த வந்த விமானங்கள் மீது, சக்திவாய்ந்த சிகப்பு நிற ஒளியை காட்டிய காரணத்துக்காக இருவரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.