சிவசேனா தலைமையகத்தை தாக்க லஷ்கர் இ தொய்பா திட்டம்: ஹெட்லி புது குண்டு
நியூயார்க்: நான் சிவசேனா கட்சியின் தலைமையகத்தை வீடியோ எடுத்தேன். எதிர்காலத்தில் அந்த கட்டிடத்தை தாக்க லஷ்கர் இ தொய்பா திட்டமிட்டிருந்தது என தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளார்.
26/11 மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவில் குடியேறினார். அங்கு ஒரு வழக்கில் கைதான அவர் 35 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அமெரிக்க சிறையில் இருந்தபடியே மும்பை தாக்குதல் வழக்கு குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளித்து வருகிறார். இன்று அவர் 4வது நாளாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
கேட் வே ஆப் இந்தியா
தீவிரவாதிகள் வந்திறங்க வசதியான இடம் தேடியபோது நான் கேட்வே ஆப் இந்தியாவுக்கு சென்றேன். தீவிரவாதிகள் பத்திரமாக வந்திறங்க கஃப் பரேட் பகுதியை தேர்வு செய்தேன்.
கஃப் பரேட்
பல இடங்களில் ஆய்வு செய்து இறுதியாக கஃப் பரேட் பகுதியை தேர்வு செய்தேன். என் முடிவை என்னை அனுப்பி வைத்தவர்களிடம் தெரிவித்தபோது அவர்களும் ஒப்புக் கொண்டனர்.
வீடியோ
தீவிரவாதிகள் வந்திறங்கும் இடங்களை வீடியோ எடுத்தேன். பாகிஸ்தானுக்கு திரும்பிச் சென்ற பிறகு 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த வீடியோக்களை மிர்ரிடம் காண்பித்தேன்.
சிவசேனா தலைமையகம்
தாதாரில் உள்ள சிவசேனா தலைமையகத்தில் வைத்து ராஜாராம் ரெகேவை சந்தித்தேன். சிவசேனா தலைமையகத்தை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினேன்.
தாக்குதல்
உத்தவ் தாக்கரேவின் பிஆர்ஓவான ரெகேவிடம் நெருங்கிப் பழகுமாறு சஜித் மிர் தெரிவித்தார். இதையடுத்து ரெகேவிடம் நெருங்கிப் பழகினேன். நான் சிவசேனா கட்சியின் தலைமையகத்தை வீடியோ எடுத்தேன். எதிர்காலத்தில் அந்த கட்டிடத்தை தாக்க லஷ்கர் இ தொய்பா திட்டமிட்டிருந்தது.