ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று லண்டனில் மாபெரும் போராட்டம்
லண்டனில் உள்ள வெம்பிளி அரங்கில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர்.
லண்டன்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் வாழும் தமிழர்கள் இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கான தடைகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்று கூடி மிகத் தீவிரமாக போராட்டம் நடத்திவருகிறார்கள்.
தமிழகத்தில் தொடங்கிய போராட்டம் அமெரிக்கா, லண்டன், சவுதி, சிங்கப்பூரிலும் களை கட்டியுள்ளன. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவர்களும் தாங்கள் வசிக்கும் இடங்களில் ஒன்று கூடி தமிழகத்தின் வீர விளையாட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதேபோல் இங்கிலாந்தில் வசித்து வரும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமைதி முறையில் பல்வேறு வகையில் தங்களது உணர்வுகளைக் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் லண்டனில் வசித்து வரும் தமிழர்கள் அங்குள்ள வெம்பிளி அரங்கில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தவுள்ளனர். இந்த போராட்டம் காலை 11 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைவரும் குடும்பத்துடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் நாளை கேம்பிரிஜ் பகுதியிலும் ஒன்று கூடி தங்களின் ஆதரவை தெரிவிக்க இருக்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.