குண்டு வெடித்தது போல் அதிபயங்கர சத்தம்... பதறிப் போன ஒபாமாவின் வெள்ளை மாளிகை!
வாஷிங்டன் : அமெரிக்கா அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் குண்டு வெடித்தது போல் அதி பயங்கர சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த பத்திரிக்கையாளர் அறை இழுத்து மூடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அலபாமாவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றிற்காக தனது குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் சென்ற ஒபாமாவை சந்திப்பதற்காக பத்திரிக்கையாளர்கள் பலர், நேற்று வெள்ளை மாளிகையில் கூடியிருந்தனர்.
அப்போது, வெள்ளை மாளிகையின் வடக்கு புல்வெளிப் பகுதியில் அதி பயங்கரமான சத்தம் கேட்டது. குண்டு வெடித்ததைப் போன்று அச்சத்தம் இருந்ததால், வெள்ளை மாளிகையில் இருந்த அனைவரும் அச்சமடைந்தனர்.
உடனடியாக, அமெரிக்க ரகசிய சேவை பிரிவு வெள்ளை மாளிகையின் பத்திரிக்கையாளர் அறையை இழுத்து மூடினர். பின்னர், சத்தத்திற்கான காரணம் குறித்து அவர்கள் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது வெள்ளை மாளிகை அருகே நின்றிருந்த உணவு வாகனம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தே சத்தத்திற்கு காரணம் எனக் கண்டு பிடிக்கப் பட்டது.
ஆனபோதும், வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப் பட்டுள்ளது. இந்த விபத்து ஏதேச்சையாக ஏற்பட்டதா அல்லது தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சியா என்று தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.