மடகாஸ்கர் தீவில் பயங்கர தீ.. 16 குழந்தைகள் உள்பட 38 பேர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு
ஆன்டனாரிவோ: மடகாஸ்கர் தீவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 குழந்தைகள் உள்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் பெரிய தீவு நாடான மடகாஸ்கரில் உள்ள குடியிருப்பு பகுதியில் புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. விழாவையொட்டி வீட்டின் மாடியில் உள்ள கூரைக் கொட்டகையில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் ஏராளமான விருந்தினர்கள் பங்கேற்றனர்.
விருந்து நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென கூரையில் தீப்பிடித்து மளமளவென அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் அங்கிருந்த அனைவரும் தீயில் சிக்கிக்கொண்டனர். இதில், 16 குழந்தைகள் உள்பட 38 பேர் சம்பவ இடத்திலே உடல் கருகி பலியாகி உள்ளனர்.
விருந்தில் பங்கேற்ற 39 பேரில் 38 பேர் இறந்துவிட்டனர் என்று காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இது ஒரு விபத்து என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.