பிரதமர் வேட்பாளர் ராஜபக்ச கிடையாது.. இலங்கை அதிபர் சிறிசேனா அறிவிப்பு..
கொழும்பு : பிரதமர் வேட்பாளராக முன்னாள் அதிபர் ராஜபக்சே நிறுத்தப்படமாட்டார் என அதிபர் மைத்ரி பால சிறிசேன அறிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் சுதந்திர கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். தேர்தலின் போது அறிவித்தபடி அண்மையில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், வரும் ஆகஸ்டு 17-ந்தேதி அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதையடுத்து, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மீண்டும் அரசியலில் களமிறங்குவதாகவும் பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இலங்கை அதிபரும், சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேனா, சுதந்திர கட்சியின் பிரதம வேட்பாளராக ராஜபக்சே அறிவிக்கப்பட மாட்டார் என அறிவித்துள்ளார்.
மேலும் கூட்டணியில் போட்டியிடுபவர்கள் பிரதம வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார்கள் என்றும், தேர்தலில் தேர்வாகும் எம்.பி.க்களின் விருப்பத்திற்கேற்பவே பிரதமர் நியமிக்கப்படுவார் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.