"பிரெக்ஸிட்"... 10.2 லட்சம் இந்தியர்களின் வாக்கு யாருக்கு விழுந்தது?
லண்டன்: ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதா, நீடிப்பதா என்ற பிரிட்டன் வாக்கெடுப்பில் இந்தியர்கள் இரு வேறாக வாக்களித்திருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலானவர்கள் விலக வேண்டும் என்ற கருத்துக்கு எதிராக வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது. 17 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
பிரிட்டனில் கிட்டத்தட்ட 10.2 லட்சம் இந்திய வம்சவாளியினர் வசிக்கிறார்கள். பிரிட்டனில் வசிக்கும் வெளிநாட்டினரில், இந்தியர்கள்தான் அதிகம் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் வாக்கு ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவாக இருக்குமா அல்லது விலகும் முடிவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு பெரிதாக இருந்தது.
பெரும்பாலானோர் எதிர்ப்பு
பிரெக்ஸிட் வாக்கெடுப்பில் பெரும்பாலான இந்தியர்கள் ஐரோப்பிய யூனியனை விட்டு விலகும் முடிவுக்கு எதிர்ப்பாகவே வாக்களித்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது. காரணம், இந்தியாவிலும் ஐரோப்பிய யூனியனை விட்டு பிரிட்டன் விலகக் கூடாது என்ற எண்ணமே பரவலாக உள்ளது. அதையொட்டியே இந்திய வம்சாவளியினரும் வாக்களித்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது.
கருத்துக் கணிப்பிலும்
சமீபத்தில் நடந்த ஒரு வாக்குப் பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் கூட இந்திய வம்சாவளியினரில் 51.7 சதவீதம் பேர் இந்த விலகலுக்கு எதிர்ப்பாக உள்ளது தெரிய வந்தது. 27.74 சதவீதம் பேர்தான் விலகலாம் என்ற முடிவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
நடுநிலை அதிகம்
அதேசமயம், இந்தக் கருத்துக் கணிப்பின்போது யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்கவில்லை என்று 16.85 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருந்தனர். இது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானியர்கள்
இதே நிலைதான் பிற ஆசிய வம்சாவளியினர் மத்தியிலும் காணப்பட்டது. பாகிஸ்தானியர்கள் மத்தியில் 56 சதவீதம் பேர் பிரியக் கூடாது என்றும், 26 சதவீதம் பிரியலாம் என்றும் கூறியிருந்தனர். வங்ககேசத்தவர் மத்தியில் 42-17 என்று இது காணப்பட்டது.
பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக நாராயணமூர்த்தி மருமகன்
அதேசமயம், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனாக், இங்கிலாந்து வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பிரீத்தி படேல் ஆகியோர் இங்கிலாந்து வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருந்தனர். இருப்பினும், எம்.பிக்கள் கீத் வாஸ், வரேந்திர சர்மா ஆகியோர் விலகக் கூடாது என்று ஆதரவு தெரிவித்திருந்தனர்.
எம்.பிக்கள் ஆதரவு
இந்திய வம்சாவளி எம்.பிக்கள் மத்தியிலும் விலகுவதற்கு பெருவாரியான ஆதரவு காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து பொருளாதாரத்தை ஐரோப்பிய யூனியன் சீரழித்து வருவதாக இவர்கள் கூறுகின்றனர். விலகும் முடிவை எடுத்தால் இங்கிலாந்து உருப்படும் என்றும், இங்கிலாந்தைச் சேர்ந்த திறமையாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் இவர்கள் கூறுகின்றனர்.