மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு ஏன் தடை?
வைகோ விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர்: வைகோ விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. அவர் இலங்கையை சேர்ந்தவர் எனவும் அவர் மீது இலங்கையில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி வைகோவை நுழையவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது மலேசிய அரசு.
மலேசிய நாட்டிற்குள் நுழைய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய நாட்டிற்கு ஆபத்தானவர் என்ற பெயர் பட்டியலில் வைகோவின் பெயர் இடம்பெற்றுள்ளதே இதற்கு காரணம் அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
விடுதலை புலிகள் அமைப்பை சார்ந்தவர் என்று கூறி வைகோவை மலேசியாவிற்குள் அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். மேலும் அவரது பாஸ்போர்ட்டையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆள்நடமாட்டம் இல்லாத இடம்
விமானநிலையத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக அமர வைத்துள்ளனராம். அமர வைத்த இடத்தை விட்டு எழுந்திருக்க கூடாது என்று வைகோவிற்கு மலேசிய அதிகாரிகள் கட்டுப்பாடுகள் வேறு விதித்துள்ளனர்.
இலங்கை குடிமகனா வைகோ?
வைகோ இலங்கை குடிமகன் என மலேசிய ரெக்கார்டுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தாம் இந்திய குடிமகன் என வைகோ கூறியதை மலேசிய அதிகாரிகள் ஏற்க மறுக்க விட்டனர்.
முதல்வரின் முயற்சியும் தோல்வி
பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் யங் வைகோவை அனுமதிக்க கூறி எடுத்த முற்சிகளும் தோல்வியை சந்தித்துள்ளன. இலங்கையில் வைகோ மீது வழக்குகள் இருப்பதாக மலேசிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கைவிரித்த அதிகாரிகள்
எனவே மலேசியாவிற்குள் அவரை அனுமதிக்க முடியாது என கைவிரித்து விட்டனர். பினாங்கு மாநில துணைமுதல்வர் ராமசாமி மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வைகோ அந்நாட்டிற்கு சென்றுள்ளார்.
சென்னையில் உள்ள தூதரகம்
இதனையடுத்து மலேசியாவிலிருந்து இன்று இரவு 10.45 அவர் மீண்டும் இந்தியாவிற்கு திருப்பியனுப்பப்படுகிறார். சென்னையில் உள்ள மலேசிய தூதரகம் அவர் மலேசியா செல்ல விசா வழங்கியிருந்தது.
பிரபாகரனுக்கு நெருங்கியவர்
வைகோ ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு நெருங்கிய நண்பராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.