அரசுப்பணம் ரூ.4,500 கோடியை அபேஸ் செய்தாரா மலேசிய பிரதமர்? - விசாரணைக் குழு அமைப்பு
கோலாலம்பூர்: அரசு நிதியில் இருந்து சொந்த வங்கிக் கணக்கிற்கு சுமார் 4500 கோடி ரூபாயை மாற்றியதாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த பன்முக விசாரணை அமைப்புகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இடம்பெறும் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப் பட உள்ளது.
மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் (61). இவர் அரசு நிதியில் இருந்து தனது சொந்த வங்கிக் கணக்கிற்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை மாற்றியதாகக் கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இது ரூ. 4500 கோடி ஆகும்
இது தொடர்பாக பன்முக விசாரணை அமைப்புகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இடம் பெறும் சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஊழல் தடுப்பு ஆணையம், மத்திய வங்கி, போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் இடம் பெறுவர்.
இந்தத் தகவலை அந்த நாட்டின் அட்டார்னி ஜெனரல் அப்துல் கலி படாயில் அறிவித்துள்ளார்.
ஆனால் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை பிரதமர் நஜீப் ரசாக் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை பதவியில் இருந்து விரட்டியடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் பொய் பிரசாரத்தின் ஒரு அங்கம்தான் இது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கிடையாது'' எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்த ஊழல் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என இரண்டு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.