செல்போனை துப்பாக்கி என நினைத்த அமெரிக்கப் போலீசார்... சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவாளி
லாஸ் வேகாஸ்: தேடப்பட்டு வந்த குற்றவாளி கையில் இருந்த செல்போனை, துப்பாக்கி எனத் தவறாகக் கருதி அவரைப் போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து பல கருப்பின இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கு உலகம் முழுவதும் இருந்து "BlackLivesMatter" என்ற முழக்கத்துடன் கண்டனக் குரல்கள் எழும்பி வருகின்றன.
இந்நிலையில், தவறுதலாக குற்றவாளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை அதிகப் படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் கொலை முயற்சி உட்பட சட்டத்திற்கு புறம்பான பல்வேறு வன்முறை செயல்களில் ஈடுபட்டவர் என்று சந்தேகிக்கப்படும் குற்றவாளி கேத் சில்ட்ரஸ் ஜூனியர்(23). இவரை அரிசோனா மாகாண அமெரிக்க போலீஸ் உயரதிகாரிகள் நீண்ட காலமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த வியாழன் அன்று கேத் லாஸ் வேகாசில் இருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அவரது வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். தொலைவில் இருந்தபடி கேத்தை வான் நோக்கி கைகளை உயர்த்தும்படி போலீசார் வலியுறுத்தினர். ஆனால், திடீரென்று போலீஸ் சுற்றி வளைத்ததால் கேத் திகைத்து நின்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது கேத்தின் கையில் துப்பாக்கி இருப்பதாக சந்தேகித்த போலீஸ், உடனடியாக அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே கேத் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அருகில் சென்று பார்த்த போது தான், கேத்தின் கையில் இருந்தது துப்பாக்கியல்ல செல்போன் என தெரிய வந்தது.
இது தொடர்பாக லாஸ் வேகாஸ் போலீசார் கடந்த வெள்ளி அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அப்போது இந்த தவறு வெளிச்சத்திற்கு வந்தது.
கேத் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கேத்தின் தாயாரும், தன் மகனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என போராட்டத்தில் குதித்துள்ளார்.
அமெரிக்காவில் போலீஸாரால் சுடப்பட்டுத்தான் கடந்த ஆண்டு அதிக அளவிலானோர் இறந்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.