ஆஸ்திரேலியாவில் 6 நாட்களாக எறும்பை சாப்பிட்டு உயிர் பிழைத்த தாத்தா
பெர்த்: ஆஸ்திரேலியாவில் உள்ள தொலைதூர பாலைவனத்தில் தொலைந்து போன 62 வயது நபர் ஒருவர் ஆறு நாட்களாக கறுப்பு எறும்பை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் ரெக் போகர்டி(62). அவர் கடந்த 7ம் தேதி மேற்கு ஆஸ்திரேலியாவின் கோல்டுபீல்ட்ஸில் உள்ள லவார்டன் அருகே இருக்கும் துப்பாக்கிச்சுடும் வீரர்களுக்கான முகாமிற்கு வேட்டைக்காக சென்றுள்ளார். தொலைதூர பாலைவனப் பகுதியில் வேட்டைக்கு சென்றவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தார் கவலை அடைந்தனர். உடனே இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.
அவர்களின் புகாரின்பேரில் போலீசார் ரெக்கை தேடிச் சென்றனர். அவர் காணாமல் போனதாக கூறப்பட்ட இடத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் அவரை போலீசார் இன்று கண்டுபிடித்தனர்.
அவர் 6 நாட்களாக எறும்பை சாப்பிட்டு உயிர் வாழ்ந்துள்ளார். அதுவும் போலீசார் அவரை கண்டுபிடிப்பதற்கு முந்தைய 2 நாட்கள் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து குடிக்க நீர் இல்லாமல் வாடியுள்ளார்.
இது குறித்து கோல்டுபீல்ட்ஸ் எஸ்.பி. ஆன்டி கிரேட்வுட் கூறுகையில்,
ரெக் ஆறு நாட்களாக கறுப்பு எறும்பை சாப்பிட்டு உயிர் வாழ்ந்துள்ளார். அவரை நாங்கள் கண்டுபிடித்தபோது அவர் மிகவும் சோர்வடைந்திருந்தார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தற்போது அவர் நன்றாக பேசுகிறார். அவர் காணாமல் போன இடம் மிகவும் சூடானது. அந்த இடத்தில் மாயமானவர்கள் பலர் உயிர் பிழைப்பது இல்லை என்றார்.