ஈராக்கில் பயங்கரம்: 300 யாசிதி கைதிகளை படுகொலை செய்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்
பாக்தாத்: ஈராக்கில் உள்ள மொசுல் நகர் அருகே யாசிதி கைதிகள் 300 பேரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு கோடை காலத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக்கின் மொசுல் உள்பட பல நகரங்களை கைப்பற்றினர். அதில் இருந்து அவர்கள் யாசிதி இன மக்கள் ஆயிரக்கணக்கானோரை சிறை பிடித்து வருகின்றனர்.
யாசிதி பெண்களை தீவிரவாதிகள் செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன.
படுகொலை
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாங்கள் சிறை பிடித்து வைத்துள்ள யாசிதி இன மக்களில் 300 பேரை கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்துள்ளனர். இந்த தகவலை யாசிதி முன்னேற்ற கட்சி தெரிவித்துள்ளது.
குற்றம்
300 பேர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டது பெருங்குற்றமாகும். மீதமுள்ள யாசிதி மக்களை தீவிரவாதிகள் விடுவிக்க வேண்டும் என்று யசிதி முன்னேற்ற கட்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விடுதலை
தாங்கள் சிறை பிடித்து வைத்துள்ள யாசிதி மக்களை விடுதலை செய்வதாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் தெரிவித்தனர். தீவிரவாதிகள் கூட நல்லெண்ண அடிப்படையில் சிறை பிடித்தவர்களை விடுவிக்கிறார்கள் என்று கருதப்பட்டது.
பணம்
சிறை பிடித்துள்ள யாசிதி மக்களை விடுவிக்க அவர்களின் குடும்பத்தாரிடம் தலா ரூ.19 லட்சம் பணம் கேட்டனர் தீவிரவாதிகள். இதையடுத்து பணம் அளித்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 217 பேரை கடந்த மாதம் 4ம் தேதி விடுவித்தனர்.
கொடுமை
யாசிதி கைதிகளை அவர்களின் குடும்பத்தாரிடமே தீவிரவாதிகள் விற்றுள்ளனர். பணம் கொடுக்க வசதி இல்லாதவர்களின் குடும்பத்தாரைச் சேர்ந்தவர்களின் நிலைமை பரிதாபத்திற்குரியது.