பெண் தீவிரவாதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் விடுவிக்க கோருவது ஏன்? 'திடுக்' தகவல்கள்!
அம்மான்: ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிறையில் இருக்கும் பெண் தீவிரவாதிகளை விடுவிக்க கோருவதே மனித வெடிகுண்டுகளாக மாற்றி அனுப்பத்தான் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தம் வசம் உள்ள ஜோர்டான் மற்றும் ஜப்பான் பிணைக் கைதிகளை விடுவிக்க ஜோர்டான் சிறையில் தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் ஐ.எஸ். பெண் தீவிரவாதி சஜித் அல்- ரிஷாவியை விடுவிக்க நிபந்தனை விதித்துள்ளனர்.
ஜோர்டானின் மாஷ்-அல்-கசாபே, ஜப்பானின் பத்திரிகையாளர் கெஞ்சிகோடோ ஆகியோர் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பிணைக் கைதிகளாக உள்ளனர். பெண் தீவிரவாதியை 24 மணிநேரத்துக்குள் விடுதலை செய்யாவிட்டால் பிணைக் கைதிகள் இருவரையும் கொலை செய்துவிடுவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2005ஆம் ஆண்டு ஜோர்டானில் ரட்டிசன் ஹோட்ட்லில் தாக்குதல் நடத்துவதற்காக தற்கொலைப் படை தீவிரவாதியாக கணவருடன் சென்றவர்தான் சஜித் அல் ரிஷாவி. இருவரும் அல் கொய்தா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் ஹோட்டல் மீதான தாக்குதலின் போது சஜித்தின் கணவர் உடலில் கட்டப்பட்டிருந்த குண்டுகள் வெடித்தன.. சஜித்தின் உடலில் கட்டப்பட்ட குண்டுகல் வெடிக்கவில்லை. இதனால் அவர் வசமாக சிக்கிக் கொண்டார்.
பின்னர் ஜோர்டான் போலீசிடம் தானும் கணவரும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த வந்ததை சஜித் ஒப்பும் கொண்டார். ஐ.எஸ். தீவிரவாதிகளால் 'சகோதரி' என்று அழைக்கப்படுகிறவர் சஜித். தற்போது ஐ.எஸ். இயக்கத்தினர் அனுப்பியுள்ள வீடியோ பதிவில் கூட சஜித்தைப் பற்றி பெருமிதமாக கூறியுள்ளனர் ஐ.எஸ். தீவிரவாதிகள்.
அதே நேரத்தில் அல்கொய்தா இயக்கத்தைச் சேர்ந்த சஜித் சிறையில் இருக்கிறார்.. அவர் எப்படி ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்தார் என்பதுதான் பெரும் கேள்வி. ஏனெனில் சஜித் கைது செய்யப்பட்டது 2005ஆம் ஆண்டு.. அப்போது ஐ.எஸ். இயக்கமே உருவாகவும் இல்லை.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 2005ஆம் ஆண்டு அல் கொய்தா இயக்கத்தில் இணைந்திருந்த அபு முசாப் அல் ஜர்காவியின் சகோதரிதான் சஜித் எனத் தெரியவந்துள்ளது. அதன் பின்னர் பக்தாதி தலைமையிலான ஐ.எஸ். இயக்கத்தில் ஜர்கா இணைந்தான். இந்த அடிப்படையில்தான் சஜித்தை விடுவிக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் கோரிவருகின்றனர்.
சஜிதாவைப் பொறுத்தவரையில் தீவிரவாதிகளால் மறக்கப்பட்ட முகமாகிவிட்டார்.. ஜோர்டான் சிறையில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார்.. அவர் எந்த நேரத்திலும் தூக்கிலிடப்படக் கூடும் என்ற நிலை இருக்கிறது. இதனால்தான் இரு பிணைக் கைதிகளை முன்வைத்து சஜிதாவை விடுதலை செய்யக் கோரி ஐ.எஸ். தீவிரவாதிகள் நிபந்தனை விதித்திருக்கின்றனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகளைப் பொறுத்தவரையில் இப்படி சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்யக் கோருவது என்பது அவர்களை மனித வெடிகுண்டுகளாக மாற்றுவதற்காகத்தான் எனக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் பத்திரிகையாளர் போலியை விடுதலை செய்யவும் இதேபோல் ஆபியா என்ற பெண் தீவிரவாதியை விடுவிக்க நிபந்தனை விதித்திருந்தனர் ஐ.எஸ். தீவிரவாதிகள்.
பெண் தீவிரவாதி ஆபியா டெக்ஸாஸில் 86 ஆண்டுகால சிறைத் தண்டனையை எதிர்கொண்டிருப்பவர். ஆனால் ஐ.எஸ். தீவிரவாதிகள் விதித்த நிபந்தனை ஏற்கப்படாததால் பத்திரிகையாளர் தலையைத் துண்டித்து உலகை அதிர வைத்தது ஐ.எஸ். தீவிரவாத கும்பல் என்பதும் குறிப்பிடத்தக்கது.