சவுதி பயணத்தின் போது தலையில் முக்காடு போட மறுத்த ட்ரம்ப் மனைவி மெலேனியாவால் சர்ச்சை!
சவுதி அரேபியாவிற்கு முதல்முறையாக சுற்றுப்பயணம் வந்துள்ள அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலேனியா ட்ரம்ப்பின் பயணம் தொடக்கத்திலேயே சர்ச்சையை எழுப்பியுள்ளது.
குவைத் : சவுதி அரேபியாவிற்கு சுற்றுப் பயணம் வந்துள்ள அமெரிக்காவின் முதல் பெண்மணி (அதிபர் மனைவி) மெலேனியா தலையில் முக்காடு அணிய மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலேனியா ட்ரம்ப் அரச முறைப் பயணமாக சவுதி அரேபியா வந்துள்ளனர். ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் வந்த மெலேனியா ட்ரம்ப் கருப்பு நிற பேன்ட் சட்டையுடன் தங்க நிற பெல்ட் அணிந்து வந்திருந்தார்.
தனது தலையில் முக்காடு போட்டுக்கொள்ள மெலேனியா மறுத்துவிட்டார். சவுதிக்கு வரும் பெண் தலைவர்கள் இதுபோன்று தெரிவிப்பது இது முதல் முறையல்ல ஏனெனில் இதற்கு முன்னர் பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்க்கெல் உள்ளிட்டோரும் முக்காடிட முடியாது என்று மறுத்துள்ளனர்.
.@realDonaldTrump, 2 years ago criticised @MichelleObama for not wearing headscarf in #SaudiArabia. Now Melania does the same? #RiyadhSummit pic.twitter.com/sDdd4rDBHF
— Jack Mendel (@Mendelpol) May 20, 2017
ஆனால் மெலேனியா ட்ரம்ப் முக்காடிட்டுக் கொள்ள மறுத்தது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதற்கு முக்கிய காரணம் அதிபர் ட்ரம்ப் தானாம். 2015ம் ஆண்டு அமெரிக்க முதல் பெண்மணி மிசெல் ஒபாமா தலையில் முக்காடிட்டுக் கொள்ளாதது மிகப்பெரிய அவமானம் என்று தனது டுவிட்டரில் ட்ரம்ப் பதிவிட்டிருந்தாராம். இந்த டூவிட்டை சுட்டிக்காட்டி தற்போது மெலேனியாவின் செயலை அமெரிக்கர்கள் விமர்சித்து வருகின்றனர்.