மெக்சிகோ சிறையில் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்: 52 பேர் பலி, 12 பேர் படுகாயம்
மான்டெர்ரி: மெக்சிகோவில் உள்ள டோபோ சிகோ சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 52 பேர் பலியாகியுள்ளனர், 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மெக்சோவின் மான்டெர்ரி நகரில் உள்ளது டோபோ சிகோ சிறை. கடந்த புதன்கிழமை இரவு 11.30 மணிக்கு 2 போதைப் பொருள் கும்பலைச் சேர்ந்த கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கோஷ்டி மோதல் சிறிது நேரத்தில் பெரிய கலவரமாக வெடித்தது.
கைதிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதுடன் சில இடங்களில் தீ வைத்தனர். இந்த கலவரத்தில் 52 பேர் பலியாகியுள்ளனர், 12 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் உள்ளவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இரவு 1.30 மணி அளவில் தான் சிறையில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. டோபோ சிகோ சிறையை பல காலமாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கும்பலுடன் புதிதாக சிறைக்கு வந்த கும்பல் மோதியதில் தான் கலவரம் வெடித்தது.
போப் பிரான்சிஸ் மெக்சிகோவுக்கு வர ஒரு நாளுக்கு முன்பு சிறையில் கலவரம் வெடித்துள்ளது. போப் சியுதாத் ஜுவாரஸில் உள்ள சிறைக்கு செல்லவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.