17 மாதங்களாக தவறான இடத்தில் தேடப்பட்ட மாயமான மலேசிய விமானம்?
பாரீஸ்: ஆப்பிரிக்க கண்டத்துக்கு தென் கிழக்கே மடகாஸ்கர் அருகே உள்ள லா ரீயூனியன் தீவில் கரை ஒதுங்கிய விமானத்தின் வால் பகுதி போயிங் 777 ரகத்தினுடையது என்று தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு மாயமான மலேசிய விமானம் போயிங் 777 ரகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீவு மொரீசியசுக்கு மேற்கே உள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. போயிங் 777 ரக விமானமான அது தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டது என்றும், அதில் பயணித்த அனைவரும் இறந்துவிட்டனர் என்றும் மலேசிய அரசு அறிவித்தது.
இதையடுத்து தெற்கு இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியா தலைமையில் பல நாடுகள் விமானத்தை தேடி வருகின்றன. ஓராண்டுக்கு மேல் தேடியும் விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை.
பிரான்ஸ்
இந் நிலையில் இந்திய பெருங்கடலில் பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள லா ரீயூனியன் தீவில் புதன்கிழமை விமானத்தின் வால் பகுதி கரை ஒதுங்கியது. அந்த பாகம் போயிங் 777 ரக விமானத்தினுடையது என்று தெரிய வந்துள்ளது. லா ரீயூனியன் தீவு ஆப்பிரிக்க கண்டத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மடகாஸ்கர்- மொரீசியசுக்கு இடையே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய விமானம்
மாயமான மலேசிய விமானமும் போயிங் 777 ரகம் ஆகும். அதனால் கரை ஒதுங்கிய பாகம் மலேசிய விமானத்தினுடையதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. விமானம் வானில் பறக்கையிலேய அந்த வால் பகுதி உடைந்து விழுந்துள்ளது என்று கூறப்படுகிறது
ஆய்வு
லா ரீயூனியனில் கிடைத்த விமானத்தின் வால் பகுதியை ஆய்வுக்காக இன்று மாலை பாரீஸுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அது நாளை காலை பாரீஸை அடையும் என்று தெரிகிறது.
தவறான இடமா?
விமானத்தின் பாகம் ஆப்பிரிக்கா அருகே கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியா தலைமையிலான குழு இத்தனை மாதங்களாக தவறான இடத்திலா விமானத்தை தேடியது என்றால் இல்லை என்பது தான் பதில்.
பாகம்
விமானத்தின் வால் பகுதி அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு லா ரீயூனியன் தீவை அடைந்திருக்கலாம். என்ஜின் அடங்கிய கனமான பகுதி சர்வதேச குழு தேடும் இடத்தில் இருக்கலாம். சர்வதேச குழு ஆஸ்திரேலியாவில் இருந்து மேற்கே 1, 000 மைல் தொலைவில் உள்ள இடத்தில் கடலுக்கு அடியில் விமானத்தை தேடி வருகிறது.
சூட்கேஸ்
லா ரீயூனியன் தீவில் வியாழக்கிழமை மேலும் சில பொருட்கள் கரை ஒதுங்கின. அவை சூட்கேஸின் பாகங்கள் போன்று இருந்தன. அவற்றையும் விசாரணையாளர்கள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.