நடக்க, வாய் பேச முடியாமல் முடங்கிப் போயுள்ள மைக்கேல் ஷூமாக்கர்
பெர்ன்: பனிச்சறுக்கு விளையாட்டின்போது தலையில் படுகாயம் ஏற்பட்டு கோமாவில் இருந்து மீண்ட முன்னாள் எப் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் நடக்க முடியாமல் இருப்பதுடன் பேசுவதும் கடினமாக உள்ளதாம்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி பிரான்ஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்தில் முன்னாள் எப் 1 கார் பந்தய வீரரான மைக்கேல் ஷூமாக்கருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து பிரான்ஸில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் கோமாவில் இருந்தார். 6 மாதம் கோமாவில் இருந்த அவருக்கு ஜூன் மாதம் 16ம் தேதி நினைவு திரும்பியது.
இதையடுத்து சுவிட்சர்லாந்து கொண்டு செல்லப்பட்ட அவருக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஷூமாக்கர் பற்றி அவரின் நண்பரும், முன்னாள் எப் 1 டிரைவருமான பிலிப்பே ஸ்ட்ரீப் கூறுகையில்,
ஷூமாக்கர் குணமடைந்து வருகிறார். ஆனாலும் அவரின் நிலைமை இக்கட்டாக உள்ளது. அவரால் பேச முடியவில்லை. விபத்தில் சிக்கி நான் சக்கர நாற்காலியில் இருப்பதை போன்றே அவரும் உள்ளார். அவரால் எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்றார்.
ஸ்ட்ரீப் கூறியது அவருடைய கருத்து என்று ஷூமாக்கரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஷூமாக்கர் குணமடைய பல ஆண்டுகள் ஆகும் என அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஜீன் பிரான்காய்ஸ் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.