ஒரு தாய்க்குத்தான் தனது குழந்தைகளுக்கு... அமெரிக்காவை அதிர வைத்த ஒபாமா மனைவியின் உணர்ச்சிமிகு உரை
வாஷிங்டன்: ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக, ஹிலாரி கிளிண்டன் முன்னிறுத்தப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, அக்க்டசி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் ஹிலாரியை ஆதரித்து, அமெரிக்க அதிபரின் மனைவி (ஃபர்ஸ்ட் லேடி) மிச்செல் ஒபாமா உரையாற்றினார்.
சமீப காலத்து அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்திலேயே மிகவும் உணர்ச்சிகரமாக அமைந்த பிரசாரம் இது என்று, அந்த நாட்டின் முன்னணி பத்திரிகைகளும், சோஷியல் மீடியா பிரபலங்களும் இதை வர்ணிக்கிறார்கள்.
மிட்செல் ஒபாமாவின் அந்த பேச்சு குடியரசு கட்சி சார்பிலான அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பையும் ஆட்டம் காண செய்துள்ளது. எனவேதான், ஹிலாரியை அழுகிய தக்காளி என்று இன்று அவர் வர்ணித்துள்ளார்.
அன்பான ஒபாமா
அப்படி என்ன பேசினார் மிச்செல் ஒபாமா.. இதோ அவரது வார்த்தைகளில் இருந்து..: எனது கணவரின், நேர்மை மற்றும் அன்பைப் பற்றி 8 வருடங்கள் முன்பு உங்கள் முன்னால் நான் உரை நிகழ்த்துகையில் எடுத்து கூறினேன்.
சிறந்த பணி
ஒபாமா அதிபராக இருந்த காலகட்டத்தில், ஒவ்வொரு நாளும் அமெரிக்காவிற்காக எங்களின் பணியை நாங்கள் சிறப்பாக ஆற்றியுள்ளோம். என் மகள்களுடன், வெள்ளை மாளிகையில் கழித்த காலம், வாழ்வில் மறக்க முடியாத அனுபவத்தைத் தந்துள்ளது.
குழந்தைகளுக்கு பாடம்
நானும் என் கணவரும், எங்கள் குழந்தைகளுக்கு, வாழ்வின் சவால்களை எப்படி, இந்த இடத்தில் இருந்து எதிர் கொள்வது என்பதைக் கற்றுக் கொடுத்துள்ளோம். ஒபாமாவின், குடியுரிமை மற்றும் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளுக்கும், புள்ளி விவரங்களுக்கும், தவறான விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்பதையும் பற்றி கூறி அவர்களை முன்கூட்டியே தயார்ப்படுத்தி வந்தோம்.
ட்ரம்ப்புக்கு பதிலடி
சிலர் நம்மிடம் கீழ்த்தரமாக நடந்து கொண்டால் நாமும் அப்படி நடக்க வேண்டிய அவசியமில்லை. எப்போதெல்லாம் அவர்கள் கீழே போகிறார்களோ அப்போதெல்லாம் நாம் ஒரு படி மேலே செல்கிறோம் என்பது தான்.
குழந்தைகளுக்காக ஓட்டு
இந்த தேர்தல் மட்டுமல்ல, இனிவரும் எல்லா தேர்தல்களிலுமே யார் குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுகிறார்களோ, அடுத்த நான்கு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு யார் குழந்தைகள் நலனில் கவனம் செலுத்துகிறார்களோ அவர்களுக்கு தான் வாக்களிக்க உள்ளோம் என்று முடிவு செய்து கொள்வோம்.
பொருத்தமானவர் ஹிலாரி
இந்த முறை நான் இந்த பொறுப்புள்ளவர்களில் ஒருவராக, அமெரிக்க அதிபர் என்ற பெயருக்குப் பொருத்தமானவர் என்று ஒருவரை பார்க்கிறேன். அவர்தான் என் தோழி ஹிலாரி கிளிண்டன்.
குழந்தைகளுக்கானவர்
ஹிலாரி இந்த நாட்டுக்காகவும், நாட்டின் குழந்தைகளுக்காகவும் தனது வாழ்க்கையில் பல விஷயங்களை செய்துள்ளார். அவர் குழந்தைக்காக மட்டுமல்ல நாட்டின் உள்ள ஒவ்வொரு குழந்தையும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் உள்ளது.
துவளாதவர்
ஹிலாரியின் செயல்பாடுகள் அமெரிக்க குழந்தைகளின் வாழ்வில் பெரிய மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன. அவர் எட்டு வருடங்களுக்கு முன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை என்றாலும், துவண்டு விடவில்லை. அவர் மீண்டும் நம் நாட்டுக்காக உழைக்க முன் நிற்கிறார். உலகம் முழுவதும் சென்று நமது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இருக்கிறார்.
தகுதியானவர்
எனக்கு ஹிலாரியை நன்றாக தெரியும், என்பதால் கூறுகிறேன், அவர் அமெரிக்காவின் அதிபராக அனைத்துத் தகுதியும் கொண்டவர். அதனால் தான் இந்தத் தேர்தலில் நான் அவருக்கு ஆதரவளிக்கிறேன். நமது குழந்தைகளுக்குச் சிறந்தவைகளை உருவாக்கி தரவேண்டும் என்பதை ஹிலாரி நன்கு அறிந்து வைத்துள்ளார்.
அடிமைகள் கட்டியது
நான் தினமும் காலையில், அடிமைகளால் கட்டப்பட்ட வீட்டில் (வெள்ளை மாளிகை) தான் எழுந்திருக்கிறேன். கறுப்பான, அறிவாளியான எனது இரண்டு மகள்களும் அங்கு தங்கள் நாய்க்குட்டிகளுடன் விளையாடுவதைப் பார்த்து ரசித்திருக்கிறேன். இப்போது இதே இடத்தில் ஓர் பெண்ணை அமெரிக்காவின் அதிபராக பார்க்க விரும்புகிறேன்.
சிறந்த நாடுதான்
யாரும் அமெரிக்கா சிறந்த நாடு இல்லை என்று கூறவிடாதீர்கள். அமெரிக்கா ஏற்கெனவே உலகின் சிறந்த நாடாகத் தான் உள்ளது. உண்மையான தலைவர்களை விரும்புகிறேன். அமெரிக்க குழந்தைகளுக்கு பாதுகாப்பை வழங்கி அவர்களை வழி நடத்தவும் தகுதியுள்ள ஒரு அதிபரை விரும்புகிறேன். ஒரு தாய் போல இருந்து ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க குழந்தைகளை பாதுகாப்பார். வருங்காலத்திற்கு வழி காட்டுவார். இவ்வாறு மிச்செல் ஒபாமா பேசினார்.
சர்ச்சையும், வரவேற்பும்
வெள்ளை மாளிகையை ஆப்பிரிக்காவில் இருந்து கூட்டி வரப்பட்ட அடிமைகளை வைத்து கட்டியதாக மிச்செல் மறைமுகமாக குறிப்பிட்டு பேசியதற்கு, ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அமெரிக்காவை பழையபடி சிறந்த நாடாக மாற்றுவோம் என்ற கோஷத்தோடு, ட்ரம்ப் உரையாற்றி வருகிறார். எனவே அமெரிக்கா சிறந்த நாடு இல்லை என்று யாரும் கூற வேண்டாம் என்று மிச்செல் உறுதிபடி கூறியுள்ளார்.