தெற்காசியாவில் தீவிரவாதம் முக்கிய பிரச்சினையாக உள்ளது: சார்க் மாநாட்டில் ராஜபக்சே பேச்சு
காத்மாண்டு: சர்வதேச அளவில் மட்டுமின்றி தெற்காசிய பிராந்தியத்திலும் தீவிரவாதம் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளதாக இலங்கை அதிபர் ராஜபக்சே, சார்க் உச்சி மாநாட்டில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
காத்மாண்டுவில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டில் பேசிய இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே பங்கேற்று உரையாற்றினார். அவர் கூறுகையில் "தெற்காசிய நாடுகள் இமைந்து சுத்தம், சுகாதாரம், தூய்மையான குடிநீர் மற்றும் மனிதவள மேம்பாட்டு விவகாரங்களில் பணியாற்ற வேண்டும். உலக அளவில் வெப்பமயமாதல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அது குறித்தும் சார்க் நாடுகள் விவாதிக்க வேண்டும்.
மின்சாரத்துறையில், இளைஞர்கள் திறன் வளர்ப்பில் சார்க் நாடுகள் ஒன்றிணைய வேண்டும். தெற்காசிய நாடுகள் கலாச்சாரம், அறிவுசார் விவகாரங்களில் மிகுந்த செழிப்பானவை. புத்த பெருமான் பிறந்த இடம் நேபாளத்தில் இருப்பதான் நேபாள நாட்டின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது.
உலக அளவில் தீவிரவாதம் பெரும் பிரச்சினையாக உள்ளது. அதுமட்டுமின்றி தீவிரவாதம்தான் தெற்காசியாவிலும் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இவ்வாறு ராஜபக்சே பேசினார்.
தினமும் தீவிரவாதிகளால் குண்டுவெடிப்பு நிகழும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தீவிரவாதம் குறித்து பேசாத நிலையில், இலங்கை அதிபர் தீவிரவாதம் குறித்து பேசியுள்ளார். இலங்கை அரசால் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டதாக கூறும், இலங்கை, திடீரென தீவிரவாதம் குறித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.