17 வயது தமிழ்ப் பெண்ணைத் தேடும் பணி தொடர்கிறது... ஒஹாயோவில் உதவி தேவை!
சிகாகோ(யு.எஸ்): ஜூலை 4ம் தேதி முதல் மில்வாக்கி நகரிலிருந்து காணாமல் போன பக்தி அன்பரசன் என்ற 17 வயது தமிழ்ப் பெண்ணைத் தேடும் பணி இன்னும் தொடர்கிறது. அவர் ஒஹாயோ மாநிலத்தில் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது.. அங்குள்ள அமெரிக்கத் தமிழர்கள் இந்த தேடுதல் பணிக்கு உதவுமாறு கோரிக்கை வந்துள்ளது.
கடந்த வாரம் சிகாகோ பகுதியில் பக்தி அன்பரசன் இருந்ததற்கான தகவல்கள் தெரிந்ததையொட்டி, அதிகாரிகள் தரப்பிலிருந்து தன்னார்வலர்களின் உதவி கோரப்பட்டது. சிகாகோ தமிழர்கள் குழுக்கள் அமைத்து சனி , ஞாயிற்றுக்கிழமைகளில் பல இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பக்தி அன்பரசன் வீடு திரும்பி விட்டார் என்றும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. அது குறித்து சிகாகோ தேடுதல் குழுவைச் சார்ந்த தன்னார்வலர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை இரவு தொடர்பு கொண்டு கேட்டோம். அதிகாரிகளிடமும் பக்தியின் பெற்றோர்களிடமும் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார்.
பக்தி அன்பரசன் இன்னும் வீடு திரும்பவில்லை எனவும் தேடுதல் பணி இன்னும் தொடர்வதாகவும், ஒஹாயோ மாநிலத்தில் தேடுதல் பணி தொடர தன்னார்வலர்களின் உதவி தேவைப்படுவதாகவும் கூறினார்.
Missingkids.com தொலைபேசி எண்ணிலும் ஜூலை 16, ஞாயிறு இரவு தொடர்பு கொண்டு கேட்டோம். அவர்களும் பக்தி அன்பரசன் தேடுதல் இன்னும் நிலுவையில் இருப்பதாகவும், தேடுதல் பணி தொடர்வதாகவும் உறுதிபடுத்தினார்கள்.
பக்தி அன்பரசன் வீடு திரும்புவதற்கு தமிழர்கள் உதவி தொடர்ந்து தேவைப்படுகிறது. ஏதேனும் தகவல் தெரிய வந்தால் 1-800-843-5678 (1-800-THE-LOST) அல்லது 1-262-532-8700 என்ற எண்ணில் அழைத்து தெரிவிக்கவும்.