ஆப்கானில் பாக்.- தலிபான் கூட்டணியை முறியடித்து இந்தியாவின் கை ஓங்குமா?
காபூல்: தலிபான்கள் மற்றும் அந்த அமைப்பை வலுப்படுத்தும் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா, இவர்களுக்கு பின்னனியில் உள்ள பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆகியவற்றை ஒடுக்கி அரசியல் நிலைத்தன்மையை, அமைதியை ஆப்கானிஸ்தானில் உருவாக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் பிரதமர் மோடியின் இன்றைய ஆப்கானிஸ்தான் பயணம் அமையும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்
ஆப்கானிஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஒழித்துக் கட்சி அமைதியை நிலைநாட்டுவதுதான் இந்தியாவுக்கு மிக முக்கியமானது.
ஆப்கான் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதற்கு பல முறை தலிபான்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதன் ஒருபகுதியாக பிரதமர் மோடி ஆப்கான் வருகை தரும்போது ஜலதாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த தலிபான்கள் சதித்திட்டம் தீட்டியிருந்தனர். இந்த சதித் திட்டத்தை ஆப்கான் உளவுத்துறை வெற்றிகரமாக முறியடித்துவிடது.
தலிபான்களை ஒடுக்க இந்தியாவிடம் இருந்து புலனாய்வுத் தகவல்கள் பகிர்ந்து கொள்வதை ஆப்கானிஸ்தான் எதிர்பார்க்கிறது. இதற்கான உத்தரவாதத்தை தற்போதைய பயணத்தின் போது பிரதமர் மோடி ஆப்கானுக்கு அளிக்கக் கூடும்.
மேலும் தலிபான்களுடன் பாகிஸ்தான் முன்முயற்சியில் நடத்தப்படும் பேச்சுவார்த்தை குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார். இந்த பேச்சுவார்த்தைகள் கடந்த ஜூலை மாதம் முடிவடைந்தது. இருப்பினும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தலிபான்களை எந்த வகையில் பயன்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்தே இந்தியாவின் நடவடிக்கை இருக்கும்.
அண்மைக்காலமாக தலிபான்களுக்கு லஷ்கர் இ தொய்பா ஆதரவளிக்கலாம் என ஐ.எஸ்.ஐ. அனுமதி அளித்துள்ளது. தலிபான்களுக்கு ஆள் மற்றும் ஆயுதபலங்களை லஷ்கர் இ தொய்பா வழங்கிவருகிறது. இந்த இரு இயக்கங்களுமே இந்தியாவுக்கு எதிரான, இந்தியாவின் கொள்கைகளுக்கு விரோதமான அமைப்புகள். இந்த சக்திகளை எதிர்கொண்டு பாகிஸ்தானை அங்கிருந்து அகற்றுவதற்கு ஆப்கானிஸ்தானின் முழு ஆதரவு இந்தியாவுக்கு தேவை.
மேலும் ஆப்கானிஸ்தான் ஏற்படுத்தப்படும் அரசியல் நிலைத்தன்மைதான் பிராந்திய அமைதியில் முக்கியமானது என்பதை பிரதமர் மோடி, ஆப்கான் பிரதமரிடம் வலியுறுத்த இருக்கிறார். முல்லா மன்சூர் தலைமையிலான தலிபான்கள் இந்தியாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை கொண்டவர்கள். பிரதமராக மோடி பதவியேற்ற மறுநாளே ஆப்கானின் ஹெராத்தில் உள்ள இந்திய தூதரகம் மீது இந்த தலிபான்கள் தாக்குதல்கள் நடத்தி மோடிக்கான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
2015 ஜூலையில் தலிபான்களுக்கும் ஆப்கான் அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை முறிவடைந்த பின்னர் தொடர்ந்து தேக்க நிலை நீடித்து வருகிறது. இந்த வகையில் தலிபான்கள், லஷ்கர் அமைப்பு தொடர்பான புலனாய்வுத் தகவல்களை ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா தொடர்ந்து வழங்க பிரதமர் மோடி உறுதியளிக்கக் கூடும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.