கருவையும் விடாத கொசுக்கடி.. சிசுவிற்கும் நோய் வருமாம்.. அதிர்ச்சி ஆய்வு
பிரேசிலியா: சில வகை கொசுக்கள் கடிப்பதால் கருவிலுள்ள சிசுவின் வளர்ச்சியில் குறைபாடுகள் அதிகரிப்பதாக பிரேசில் நாட்டு ஆய்வு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
உருவத்தில் சிறியதாக இருந்தாலும் உலகத்திலேயே மிகவும் ஆபத்தான உயிரினமாக கொசு கருதப்படுகிறது. கொசுக்கடி மூலம் பல்வேறு தீய வைரஸ்கள் பரப்பப்பட்டு மனிதர்களுக்கு கொடிய நோய்கள் உருவாகின்றன.
இந்நிலையில், சில வகைக் கொசுக்கள் கர்ப்பிணிப் பெண்களைக் கடிப்பதன் மூலம் அவர்களது வயிற்றில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சியும் பாதிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
ஜிக்கா காய்ச்சல்...
ஜிக்கா காய்ச்சலின் தாக்கம், பிரேசிலில் முதல் தடவையாக கடந்த ஏப்ரல் மாதம் இனங்காணப்பட்டது. இந்தக் காய்ச்சலுக்குக் காரணமான கொசு, ஆப்பிரிக்காவில் இருந்து கொசு மூலம் பரவுகிறது.
சிசுவிற்கும் ஆபத்து...
கர்ப்பிணிகள் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகும் போது, அவர்களது கருவில் உள்ள சிசுவிற்கு வளர்ச்சிக் குறைபாடுகள் அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தலை வளர்ச்சி பாதிப்பு...
இது, கருவில் உள்ள சிசுவின் மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தி குழந்தையின் தலை வளர்ச்சியை பாதிக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர்.
பெண்களுக்கு வேண்டுகோள்...
இதனால், ஜிக்கா காய்ச்சல் தாக்கத்திற்கு உள்ளான பகுதிகளில் இருக்கும் பெண்களை கர்ப்பம் தரிக்க வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலி...
இந்த வைரஸ் காரணமாக இந்த வாரம் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஜிக்கா காய்ச்சல் காரணமாக உலகில் ஏற்பட்ட முதல் மரணங்கள் இவை என பதியப்பட்டுள்ளன.