பணத்துக்காக... இப்படியும் ஒரு தாய்.. மகளுடன் துபாயில் கைது!
துபாய்: பணத்திற்காக பெற்ற மகளை சக இந்தியர் ஒருவருடன் பழக வைத்து, ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதாக ஒரு இந்தியப் பெண்ணையும், அவரது மகளையும் துபாய் போலீஸார் கைது செய்துள்ளனர்.
துபாய் அருகில் உள்ள அஜ்மன் நாட்டிலுள்ள கம்பெனி ஒன்றில் உதவி மேனஜராக பணியாற்றி வருபவர் இந்தியரான மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது ). இவரிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார் கீதா என்ற இந்தியப் பெண்.
இதற்காக தனது 23 வயது மகளை மணியுடன் நெருங்கிப் பழக வைத்துள்ளார். சமீபத்தில் அஜ்மனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து மணியையும், மகளையும் தங்க வைத்த கீதா, இருவரும் தனிமையில் இருப்பது போன்று மணிக்குத் தெரியாமல் ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
பின்னர், அந்தப் புகைப்படங்களைக் காட்டி மணியை அவர் மிரட்டியுள்ளார். 5 லட்சம் திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் 80 லட்சம் ரூபாய்) கொடுக்காவிட்டால், இந்த ஆபாசப் புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணி, இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கீதாவையும், அவர் மகளையும் கைது செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.