கழுதைக் காதுகள்... எதிர்காலம் கருதி மகனைக் கொன்ற ‘பேய்’... துருக்கியில் பயங்கரம்!
அங்காரா: துருக்கியில் காதுகள் பெரிதாக இருந்ததால் 10 வயது மகனைக் கொலை செய்த தாயைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
துருக்கி தலைநகரான அங்காராவைச் சேர்ந்தவர் நுரே சகான்(37). இவரது 10 வயது மகனுக்கு காதுகள் பெரிதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கவலையடைந்த நுரே, மருத்துவர்களின் ஆலோசனைப் படி மகனுக்கு காதில் அறுவைச் சிகிச்சைகள் மேற்கொண்டார்.
ஆனபோதும், மகனது காதுகள் சிறிதாகவில்லை என நுரேவுக்கு தோன்றியது. இதனால், மனமுடைந்த நுரே தனது மகனை மருத்துவமனையின் கழிப்பறைக்குள் வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.
பின்னர், கார் மூலம் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டார் நுரே. ஆனால், எதிர்பாராத விதமாக நுரேயின் கார் விபத்தில் சிக்கி, மீண்டும் அதே மருத்துவமனையிலேயே அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.
இதற்கிடையே, நுரேயின் மகனின் சடலத்தை கழிப்பறையில் கண்ட மருத்துவமனை ஊழியர்கள் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் நுரேயைக் கைது செய்தனர்.
இதுதொடர்பாக, நுரேயிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மகனைக் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘அந்த ராட்சத காதுகளால் என் மகன் மிகவும் அசிங்கமான தோற்றத்தை பெற்றிருந்தான். வருங்காலத்தில் அனைவரும் அவனை கேலி செய்தால் சங்கடப்படுவான் என்பதற்காகவே நான் கருணைக்கொலை செய்தேன்' என நுரே தெரிவித்துள்ளார்.