தீவிரவாதி லக்வியை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தது பாகிஸ்தான் அரசு!
இஸ்லாமாபாத்: லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் மூத்த தளபதி ஷகிர் உர் ரஹ்மானை பாகிஸ்தான் அரசு மீண்டும் இன்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மும்பை தாக்குதல் வழக்கில் லக்விக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள் மும்பையில் கொடூரத் தாக்குதலை நடத்தினர். இதில் 166 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர்.
இந்த தாக்குதலை நடத்தியோரில் சிக்கியது பாகிஸ்தானைச் சேர்ந்த அஜ்மல் கசாப்தான்..அவனுக்கு சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதே நேரத்தில் இந்தியாவின் நெருக்கடியால் பாகிஸ்தானிலும் மும்பை தாக்குதல் வழக்கு குறித்து அந்நாட்டு அரசு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டது.
இதில் 2009 ஆம் ஆண்டு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதியான ஷகி உர் ரஹ்மான் லக்வி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். பெயருக்கு சிறையில் அடைக்கப்பட்டாலும் அங்கு சகல வசதிகளுடன் மனைவியுடன் குடும்பம் நடத்தி ஒரு குழந்தைக்கும் தந்தையானான்.
இதுபற்றி இந்திய அரசு எத்தனையோ முறை அதிருப்தி தெரிவித்தும் அதையெல்லாம் பாகிஸ்தான் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் பெஷாவரில் 132 பிஞ்சு குழந்தைகள் உட்பட 141 பேரை தெஹ்ரிக் இ தலிபான்கள் படுகொலை செய்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்க லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்த திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் மும்பை தாக்குதல் வழக்கில் லக்விக்கு எதிராக போதுமான சாட்சியம் இல்லை என்று கூறி நீதிமன்றம் திடீரென ஜாமீன் வழங்கியது.
தெஹ்ரிக் இ தலிபான் அமைப்புக்கு எதிரான தாக்குதலில் லக்வி தலைமையில் லஷ்கர் இ தொய்பாவை களமிறக்கும் நோக்கத்துடனேயே ஜாமீன் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. லக்விக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. அதுவும் பெஷாவர் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு ஆறுதலாக இந்தியா அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த நேரத்தில் லக்விக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டது அதிர்ச்சியடைய வைத்தது.
மேலும் லக்விக்கு எதிராக போதுமான ஆதாரங்களைக் கொடுத்தும் ஜாமீனில் விடுதலை செய்தது எப்படி என்றும் இந்தியா கேள்வி எழுப்பியது. இந்த நிலையில் லக்விக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தான் அரசு மேல்முறையீடு செய்ய முடிவு செய்தது.
மேலும் பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் லக்வியை இன்று கைது செய்து ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் பாகிஸ்தான் அரசு அடைத்துள்ளது.