'நட்சத்திரத்தை கிழித்தெறிய தயாராகுங்கள்’... ராணுவ வீரர்களுக்கு ‘குழந்தைசாமி’ திடீர் உத்தரவு!
பியாங்யாங்: அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் போருக்கு எப்போதும் ஆயத்தமாக இருக்குமாறு வடகொரிய ராணுவ வீரர்களுக்கு, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.
தென் கொரியாவைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து, வரும் 3-ம் தேதி அமெரிக்க வீரர்கள் 8 வார கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளனர். தன் எதிரி நாடான தென் கொரியாவுடன் நட்பு பாராட்டி வருவதால், அமெரிக்கா மீது வடகொரியா கோபத்தில் உள்ளது.
இந்நிலையில், தலைநகர் பியாங்யாங்கில் போர் நினைவு அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரங்கத்தை திறந்து வைத்த கிம் ஜாங்-உன், ராணுவ வீரர்களிடையே வீரஉரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறியதாவது :-
தேசத்தை மீண்டும் (தென் கொரியா-வட கொரியா) ஒன்றிணைக்க வேண்டிய சூழல் தற்போது நிலவி வரும் இவ்வேளையில் ஒட்டுமொத்த ராணுவமும் சித்தாந்தப்படியும், அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் முழுமையாக ஆயுத்தமாக இருக்க வேண்டும். கடினமான பயிற்சியில் ஈடுபட்டு ‘பட்டை மற்றும் நட்சத்திரத்தை' (அமெரிக்க கொடியில் உள்ள சின்னங்கள்) துண்டுத்துண்டாக கிழித்தெறிய வேண்டும்' என்றார்.