சூதாட்ட வீரர்களை பாதுகாக்கிறார் என்.சீனிவாசன்.."சிக்சர்" அடிக்கும் லலித் மோடியின் "நெக்ஸ்ட் பாம்"
லண்டன் : சூதாட்டத்தில் தொடர்புடைய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை உதன் உரிமையாளர் என்.சீனிவாசன் பாதுகாக்க நினைக்கிறார் என்று ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
சூதாட்டம் தொடர்பாக தான் குற்றம்சாட்டிய வீரர்கள் விவகாரத்தில் அப்போதைய இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் என்ன செய்து கொண்டிருந்தார்? என லலித் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
குற்றச்சாட்டுக்குள்ளான வீரர்களை அவர் பாதுகாக்க நினைக்கிறாரா? என்பதை அறிந்த கொள்ள நான் மட்டுமல்ல; இந்தியா கூட ஆவலாக உள்ளது. தனது பதவிக்குரிய நம்பகத்தன்மைக்கு ஏற்ப சீனிவாசன் செயல்படவில்லை என்றால்.., கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.எல். லீக் தொடரின் தலைவராக இருந்தவர் லலித் மோடி. நிதி முறைகேடு தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டில் அந்த பதவியில் இருந்து ‘சஸ்பெண்ட்' செய்யப்பட்டு தற்போது லண்டனில் தலைமறைவாக உள்ளார்.
ஐ.பி.எல். லீக் தொடரை வைத்து நடத்தப்பட்ட சூதாட்டம் குறித்து 2013-ம் ஆண்டில் ஐ.சி.சி., தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சனுக்கு, லலித் மோடி அனுப்பிய தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரெய்னா, ஜடேஜா, பிராவோ உள்பட குறைந்தது நான்கு சென்னை அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக லஞ்சம் மட்டுமன்றி, சில ‘பிளாட்டுகளும்' பரிசாக பெற்றனர். பிரபல கிரிக்கெட் சூதாட்ட ‘புக்கி' என்று சந்தேகிக்கப்படும் தொழிலதிபர் பாபா திவான் என்பவரிடம் இவர்கள் மூவரும் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். இது இவர்களின் நேர்மையை கேள்விக்குறியாக்கியது. இதெல்லாம் உண்மையாக இருக்காது என்று நம்புகிறேன். ஒருவேளை உண்மையாக இருந்தால், இன்னும் பலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருக்கலாம்,' என, தெரிவித்திருந்தார்.
மேலும், பிரிமியர் லீக் தொடரின்போது ரூ.10,000 கோடி வரை சூதாட்டம் நடக்கிறது. இதை பல ஆண்டுகளாக கூறுகிறேன். அப்படி இருந்தும் இதைத் தடுக்க யாரும் முன்வரவில்லை,' எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சூதாட்ட விவகாரம் தொடர்பாக வரும் காலங்களில் மேலும் பல ரகசியங்களை அம்பலப்படுத்தப் போவதாக லலித் மோடி கூறியிருப்பது பெரும்புள்ளிகள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.