துபாயில் ஈமான் அமைப்பு சார்பில் நாகூர் ஹனிபாவுக்கு இரங்கல் கூட்டம்
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் மறைந்த பிரபல பாடகர் நாகூர் ஹனிபாவுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ.லியாக்கத் அலி தலைமை வகித்தார். மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் முன்னிலை வகித்தார்.
துணைப் பொதுச் செயலாளர் ஏ. முகம்மது தாஹா இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். அப்போது பிரபல இஸ்லாமிய பாடகர் நாகூர் ஹனிபாவின் மறைவு சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். தனது வசீகரக் குரலால் மட்டுமல்லாது இஸ்லாமிய கருத்துக்களையும், வரலாற்று நிகழ்வுகளையும் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் பாடியுள்ளார்.
இவை பட்டிதொட்டியெங்கும் மட்டுமல்லாது கடல் கடந்து வாழும் தமிழர்கள் உள்ள பகுதிகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரது மறைவுக்கு ஈமான் அமைப்பு இரங்கல் தெரிவிக்கிறது என்றார். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் பொறுமையை தரவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
கல்விக்குழு செயலாளர் அஞ்சுகோட்டை அப்துல் ரசாக், நலத்துறை செயலாளர் பைஜுர் ரகுமான், இக்பால், காதர், யாகூப் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.