109 பாலியல் புகார்கள்... ராஜபக்சேயின் மூத்த மகன் நமல் கைது
கொழும்பு: வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்களை பலாத்காரம் செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மூத்த மகன் நமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் அதிபராக 10 ஆண்டு காலம் பதவி வகித்தவர் ராஜபக்சே. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இவர் பதவி விலகினார்.
இலங்கையில் புதிய ஆட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் அவரது குடும்பத்தினர் செய்த முறைகேடுகள் குறித்து பல்வேறு புகார்கள் குவிந்தன. அவரது தம்பிகள், மனைவி மற்றும் மகன்கள் மீது அத்தகைய புகார்கள் கூறப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ராஜபக்சே மூத்த மகன் நாமல் மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது. தற்போது நாமல் இலங்கை பாராளுமன்றத்தில் எம்.பி. ஆக உள்ளார். வேலை வாங்கி தருவதாக கூறி பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது புகார்கள் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் மீது 3 பெண்கள் பாலியல் புகார் கூறியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் கண்டி நீலப்படை அணியின் அதிகாரியும் சம்பந்தப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. நமல் ராஜபக்சேவுக்கு எதிராக இதுவரை 109 பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள நமல் ராஜபக்சே இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக சட்டவிரோத பண பரிவர்த்தனை குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.