நைஜீரியாவில் அதிபரின் பெயரை நாய்க்கு சூட்டியவர் கைது!
ஓகுன்: நைஜீரியா நாட்டின் அதிபர் முஹம்மது புஹாரியின் பெயரை நாய்க்கு வைத்த நபரை போலீஸார் கைது செய்தனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சரிசம அளவில் வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் தென்பகுதியில் கிறிஸ்தவ மக்களும், வடபகுதியில் முஸ்லிம்களும் பெரும்பான்மை மிக்கவர்களாக உள்ளனர்.
இந்நிலையில், நைஜீரியாவில் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓகுன் மாநிலத்தை சேர்ந்த சோசிம் சினாக்வே என்பவர் தனது வளர்ப்பு நாய்க்கு அந்நாட்டின் அதிபரான முஹம்மது புஹாரியின் பெயரை சூட்டியுள்ளார். மேலும், நாயின் உடலின் இருபக்கங்களிலும் முஹம்மது புஹாரி என்ற பெயரையும் எழுதி வைத்துள்ளார்.
இது தொடர்பாக சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது போன்ற செயல்கள் மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்கிவிடும் என்பதால், சோசிம் சினாக்வேவை கைது செய்த போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முஹம்மது புஹாரி எனது ஹீரோ, அதனால் தான் அவரது பெயரை எனது நாய்க்கு சூட்டினேன் என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளார் சோசிம் சினாக்வே. இந்த வழக்கை செப்டம்பர் 19-ந் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சோசிம் சினாக்வே தற்போது ஜாமினில் உள்ளார்.