செவ்வாய்க்கு பறக்கணுமா... நாசா கூப்பிடுது என்னன்னு பாருங்க.. அப்ளை பண்ணுங்க!
வாஷிங்டன்: விண்வெளி வீரராக மாறி, செவ்வாய் கிரகத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பவர்களின் கனவை நினைவாக்க நாசா ஒரு சூப்பர்ப் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
ஆம், விண்வெளி வீரர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகம் குறித்த அமெரிக்காவின் நான்கு விண்வெளி திட்டங்களில் ஏதாவது ஒன்றில் பணி புரியும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
அதாவது சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்குப் போய் ஆய்வு மேற்கொள்ளலாம், இரு அமெரிக்க நிறுவனங்கள் தற்போது உருவாக்கி வரும் இரண்டு வர்த்தக ரீதியிலான விண்கப்பல்களில் பயணிக்கலாம் மற்றும் நாசாவின் ஓரியான் விண்கலம் மூலம் செவ்வாய்க்குப் பயணிக்கும் வாய்ப்பையும் பெறலாம்.
செவ்வாயில் மனிதர்கள்...
இதுகுறித்து நாசா நிர்வாகியும், முன்னாள் விண்வெளி வீரருமான சார்லஸ் போல்டன் அறிக்கை ஒன்றில் கூறுகையில், "செவ்வாய்க்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் பயணத்தை நாசா ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளது.
|
திறமைசாலிகள்...
அதற்குத் தேவையான திறமையான ஆண், பெண்களை நாங்கள் தேடி வருகிறோம். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இந்த வாய்ப்பை அளிக்க விரும்புகிறோம்" என்றார்.
அமெரிக்காவிலிருந்து...
மேலும் அவர் கூறுகையில், "மிகவும் அசாதாரமான அமெரிக்கர்களை இதில் இணையுமாறு அழைக்கிறோம். இதில் தேர்வாகும் விண்வெளி வீரர்களும், வீராங்கனைகளும் அமெரிக்க மண்ணிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். அமெரிக்க விண்கலத்திலேயே இவர்கள் அழைத்துச் செல்லப்படுவர்.
விண்ணப்பம்...
இந்த விண்வெளி வீரர் பணிக்கு ஆண், பெண் இருவருமே விண்ணப்பிக்கலாம் என நாசா அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தை இணையதளம் வாயிலாக பெறலாம் என்றார் அவர்.
கடைசித் தேதி...
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி ஆகும். 2017ம் ஆண்டு ஜூன் மாதவாக்கில் தேர்வு செய்யப்பட்ட விண்வெளி வீரர்கள் குறித்த அறிவிப்பை நாசா வெளியிடும்.
முக்கியத் தகுதிகள்...
இந்தப் பணிக்குரிய மற்ற முக்கிய தகுதிகளாக நாசா கூறுவது இவற்றைத் தான்:
- மற்ற விண்வெளி வீரர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் மனப்பாங்கு. அதாவது ஒரே அறையைக் கூட பகிர்ந்து கொள்ளும் பக்குவம் தேவை.
பணியை நேசிக்க வேண்டும்...
- விண்வெளி ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திலோ அல்லது செவ்வாய் கிரகத்திலோ பணி புரியும் வாய்ப்பு கிடைக்கலாம். அந்த சமயங்களில் விண்வெளி குறித்து ஆச்சர்யப் படுபவராக இருந்தால் பணியில் தொய்வு ஏற்படும். எனவே, விண்வெளி துறையை நேசிப்பவராக இருக்க வேண்டும்.
- சாகசங்களை எதிர்கொள்ளத் தயாரானவராக இருக்க வேண்டும். மாறாக பயப்படுபவராகவோ, பதட்டப்படுபவராகவோ இருக்கக் கூடாது.
ஆர்வம் தேவை...
- விண்வெளிக்குச் சென்றால் கோள்களைப் பற்றி மட்டுமின்றி, அங்கு செடி வளர்ப்பதில் கூட ஆர்வம் உடையவராக இருக்க வேண்டும். அப்போது தான் விண்வெளி பயணத்தை சுவாரஸ்யமானதாக, பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள முடியும்.
உயரத்தைப் பார்த்து பயம் கூடாது...
- இவற்றிலெல்லாம் மிகவும் முக்கியமானது இது. ஆம், உயரத்தைப் பார்த்து பயப்படாதவராக இருக்க வேண்டும். ஏனெனில் பூமிக்கு மிக மிக அதிக உயரத்தில் விண்வெளியில் பறந்தபடி ஆய்வுகள் செய்ய வேண்டி இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில் உயரத்தைப் பார்த்து உங்களுக்கு மயக்கம் வந்து விடக்கூடாது என்பதால் தான்.