தமிழகத்தை அச்சுறுத்தும் “டெங்கு”, பிரேசிலையும் விடவில்லை... இதுவரை 700 பேர் பலியாம்!
சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. மேலும், டெங்குவிற்கு இதுவரையில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அவர்களில் பாதியளவில் சிறுவர்களும், குழந்தைகளும், முதியவர்களும் அடக்கம்.
தமிழகம் மட்டுமல்லாமல் டெல்லி, ஹரியானா என பல மாநிலங்களையும் டெங்கு ஆட்டிப்படைத்து வருகிறது. தமிழகத்தில் செங்கோட்டை, திருநெல்வேலி, கரூர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
இதேபோல பிரேசிலிலும் டெங்குக் காய்ச்சால் பேயாட்டம் போடுகிறது. அங்கு இதுவரை 700 உயிர்களை டெங்கு பறித்துள்ளதாம்.
சென்னையில் 2 வயது குழந்தை:
இதே போன்று சென்னை ராயப்பேட்டையில் 2 வயது குழந்தையான பிரகதிகா டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4.15 மணி அளவில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
நெல்லையில் 3 குழந்தைகள் பாதிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவுக்கு நிலைமை காணப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் அரசுத்துறைகள் தற்போது தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. தாளார்குளத்தை சேர்ந்த 3 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரூரில் 2 பேர் பலி:
கரூரை அடுத்த நெரூர் அருகே உள்ள ஒத்தக்கடையை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் அருணின் மகளும், 7 ஆம் வகுப்பு மாணவியுமான தேசிகா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தர்ஷினி என்ற மாணவி உயிரிழந்தார். இந்நிலையில் இன்று தேசிகா பலியானது அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் 700 பேர் பலி:
இதேபோன்று மத்திய மற்றும் தென்அமெரிக்க நாடுகளில் டெங்கு காய்ச்சல் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பிரேசிலில் கடுமையாக தாக்கியுள்ளது. இங்கு டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 700 பேர் பலியாகி உள்ளனர். அங்கு சாவ்பாலோ மாகாணத்தில்தான் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியிலும் அதிகம்:
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இதுவரை 7,000க்கும் மேற்பட்டோர் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அங்கு இதுவரையில் 25க்கும் மேற்பட்டோர் டெங்குவால் இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், மருத்துவ துறை அதிகாரிகள் போதிய அக்கறை காட்டவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.