80 ஆண்டுகளுக்குப் பின் நேபாளத்தை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம்! மீண்டும் தப்பியது பசுபதிநாத் ஆலயம்!!
காத்மாண்டு: நேபாளத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கமானது 1934 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தை நினைவுகூறுவதாக இருக்கிறது... 80 ஆண்டுகளுக்குப் பின்னர் பயங்கர நிலநடுக்கத்தால் நேபாளம் பேரழிவை சந்தித்துள்ளது.
1934 ஆம் ஆண்டு ஏற்பட்ட "பீகார் - நேபாள்" நிலநடுக்கம்தான் இதுவரையில் மிகவும் மோசமான நிலநடுக்கம்... இது கிழக்கு நேபாளத்தில் மையம் கொண்டு புருனியா முதல் சம்பரான் வரை சேதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலநடுக்கத்தில் கிட்டதட்ட 12,000 பேர் நேபாளத்திலும், 7,253 பேர் பீகாரிலும் உயிரிழந்தனர்.
8.0 என்று ரிக்டர் அளவில் பதிவான அந்த நிலநடுக்கத்தில் முங்கேர், காத்மாண்டு மற்றும் முசாபர்பூர் ஆகிய இடங்கள் முழுமையாக அழிந்தன. 1934ஆம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதி ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது பீகாரையும், நேபாளத்தையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.
இன்றைய நிலநடுக்கத்தில் முழுவதுமாக சேதமடைந்த தரகரா டவரும் அன்று பாதிக்கப்பட்டு மீண்டும் புணரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புகழ்பெற்ற பசுபதிநாத் ஆலயம் 1934ஆம் ஆண்டைப் போலவே தற்போதும் எந்தவித சேதாரமும் இல்லாமல் தப்பியிருக்கிறது.
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவிலும் இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. பதான், காத்மாண்டு, பகாத்பூர் ஆகிய இடங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. தற்போதும் பதானில் உள்ள புகழ்பெற்ற தர்பார் ஸ்கொயர் தரைமட்டமாகிப் போயுள்ளது.
இதனிடையே 1988 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கத்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6 அலகுகளாக பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.