அழுகையும், அலறலுமாக உள்ள நேபாளத்தில் பலி எண்ணிக்கை 7,000ஐ தாண்டியது
காத்மாண்டு: நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இடிபாடுகளில் தோண்டத் தோண்ட பிணங்களாக வருகிறது.
வெளிநாட்டவர்கள்
மலையேறுவதற்காக நேபாளத்திற்கு வந்த சில வெளிநாட்டுக்காரர்கள் உள்பட 50 பேரின் உடல்களை அந்நாட்டு போலீஸ் குழு நேற்று மீட்டது. இதையடுத்து பலி
எண்ணிக்கை 7 ஆயிரத்து 40 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காயம் அடைந்தோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 123 ஆக உயர்ந்துள்ளது.
மாயம்
மலையேறச் சென்று பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து 50 பேரின் உடல்கள் மீட்கபட்டாலும் அந்த பகுதியில் 200 பேர் மாயமாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதியில் பெய்த மழை மற்று மோசமான வானிலை காரணமாக நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க குழு
நேபாளத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள அமெரிக்காவில் இருந்து ராணுவ வீரர்கள் நேற்று காத்மாண்டு வந்துள்ளனர். அரசின் மீட்பு பணி மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் அமெரிக்க குழு வந்துள்ளது.
நூடுல்ஸ்
ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் நூடுல்ஸ் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் போடப்பட்டன. ஆனால் மக்கள் முறையாக சமைத்து சாப்பிட அரிசி மற்றும் காய்கறிகளை எதிர்பார்க்கின்றனர் என்று நேபாள உணவுக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
டென்ட்டுகள்
நிலநடுகத்தால் நேபாளத்தில் 6 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அவ்வப்போது ஏற்படும் நில அதிர்வுகளுக்கு பயந்து மக்கள் திறந்தவெளியில் தங்கியுள்ளனர். அதில் சுமார் 20 லட்சம் பேர் டென்ட்டுகள் இல்லாமல் உள்ளனர்.
மழை காலம்
நேபாளத்தில் இந்த ஆண்டு மழை காலம் வழக்கத்திற்கு முன்பே துவங்கிவிடும் என்பதால் அதற்குள் 20 லட்சம் பேருக்கு டென்ட்டுகள் அமைக்க வேண்டும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
நோய்கள்
மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன, ஆங்காங்கே பிணங்கள் புதைக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் வருகின்றன. மேலும் இடிபாடுகளுக்குள் ஏராளமான பேர் இறந்து கிடப்பதால் தொற்றுநோய் ஏற்படும் அபாம் அதிகம் உள்ளது.