ஹூட் ஹூட் புயலால் நேபாளத்தில் உண்டான பனிப்புயல் - பலி எண்ணிக்கை 39 ஆனது
காட்மண்ட்: நேபாள பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீசிச் சென்ற ஹூட் ஹூட் புயல் ஆந்திரா மற்றும் ஒடிசாவை சீர் குலையச் செய்தது. புயலின் பாதிப்பு மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து அங்கு மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.
ஹூட் ஹூட் புயலின் தாக்கத்தால் நேபாளத்திலும் கனமழையும், அதனைத் தொடர்ந்து பனிப்புயல், பனிச்சரிவு உள்ளிட்ட விபத்துக்களும் உண்டானது.
அந்தவகையில், கடந்த வாரம் அங்குள்ள மனாங், முஸ்டாங் மாவட்டங்களையொட்டி, இமயமலையில் உள்ள அன்னபூர்ணா மலைப்பகுதியில் திடீரென பனிப்புயல் வீசியது. இதனால், பனிப்பாறைகள் சரிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி அப்பகுதியில் மலையெறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு இந்தியர் உட்பட 30 பேர் பலியானார்கள். தொடர்ந்து மாயமானவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.
பனிப்புயல் வீசும் போது இப்பகுதியில் சுமார் 150 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, மீட்புப் பணியில் 4 ஹெலிகாப்டர் உதவியோடு நேபாள ராணுவ வீரர்களும், போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பனிமலையில் சிக்கித் தவித்த 41 பேரை உயிருடன் மீட்கப் பட்டனர். மேலும், 9 சடலங்களும் மீட்கப் பட்டுள்ளதால் பலியானவர்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
பனிச்சரிவில் சிக்கி, சுமார் 5,416 மீட்டர் உயரமுள்ள மலைப்பகுதியில் தவித்துக் கொண்டிருந்த சுமார் 350 பேர் இதுவரை உயிருடன் மீட்கப் பட்டுள்ளனர்.
வரலாற்றில் இல்லாத அளவுக்கு சுமார் ஒரு மீட்டர் அடர்த்தி கொண்ட பனிப்பொழிவு ஏற்பட்டதால் மீட்பு நடவடிக்கைகளில் சற்று பின்னடைவு ஏற்பட்டதாகவும், தற்போது, பனி மெல்ல உருகத் தொடங்கியுள்ளதால் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெறும் என நம்புவதாகவும் மீட்புப் படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.