நேபாளத்தில் பலி எண்ணிக்கை 4,000 ஆக உயர்வு: கன மழையால் மீ்ட்பு பணி பாதிப்பு
காத்மாண்டு: நேபாளத்தில் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை சுமார் 4 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கன மழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை சுமார் 4 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 6 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தை அடுத்து நேபாளத்தில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது.
இதனால் மக்கள் தொடர்ந்து பீதியில் உள்ளனர்.
கனமழை
இடிந்து கிடக்கும் கட்டடிங்களில் சிக்கியிருக்கும் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் நில அதிர்வுகளாலும், கன மழையாலும் மீட்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.
உணவு, நீர்
உண்ண உணவு, குடிக்க போதிய நீர் இன்றி மக்கள் வாடி வருகின்றனர். தலைநகர் காத்மாண்டுவில் திரும்பும் பக்கம் எல்லாம் பிணமாகக் கிடப்பதால் மக்கள் ஊரை காலி செய்து வருகின்றனர். இந்நிலையில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தொடும் என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தள்ளார்.
விமான நிலையம்
காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டவர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் உணவு, நீரின்றி தவிப்பதாக கூறப்படுகின்றது. மீட்பு குழுவினர் குழந்தைகள், பெண்களை முதலில் விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்கின்றனர்.
தெருக்கள்
காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் காயம் அடைந்தவர்களில் பலர் மருத்துவமனைகளுக்கு வெளியே தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் உள்ள பிணவறைகளும் நிரம்பி வழிகின்றன.
உதவி
நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 டன் தண்ணீர் பாட்டிலக்ள், 22 டன் உணவு பொருட்கள், 2 டன் மருந்துகள் மற்றும் 2 டன் போர்வைகளை இந்தியா காத்மாண்டுவுக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை குழு மற்றும் மருத்துவர்கள் குழுவையும் அனுப்பி வைத்துள்ளது.
குழப்பம்
நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் எங்கு திரும்பினாலும் கட்டிடங்கள் இடிந்து கிடப்பதுடன், பிணங்களாக கிடக்கின்றன. மின்சாரம் மற்றும் தொலை தொடர்பு சேவை ஆகியை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே பீதியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது.