காத்மாண்டுவுக்கு பெரிய கும்பிடு போட்டுவிட்டு கிராமங்களுக்கு செல்லும் நேபாள மக்கள்
காத்மாண்டு: நேபாளத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து பெரும்பாலான மக்கள் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
நேபாளத்தில் 7.9 அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 250 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 ஆயிரத்து 122 பேர் காயம் அடைந்துள்ளனர். நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டு நிலைகுலைந்து போயுள்ளது. தலைநகரில் வசித்து வந்தவர்களில் பலர் பலியாகியுள்ளனர். இன்னும் இடிபாடுகளை அகற்றும் வேலை நடந்து வருகிறது. இதற்கிடையே அவ்வப்போது ஆப்டர்ஷாக் எனப்படும் நில அதிர்வுகள் வேறு ஏற்பட்டு மக்களை மேலும் பீதியடையச் செய்கிறது.
நிலநடுக்கம், நில அதிர்வுகளால் பயத்தில் உள்ள மக்கள் காத்மாண்டுவில் இருந்து வெளியேறி கிராமங்களுக்கு செல்கிறார்கள். இதனால் காத்மாண்டுவில் இருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேறுவதை காண முடிகிறது.
நாங்கள் பல காலம் இங்கேயே இருந்துவிட்டோம், திடீர் என்று காத்மாண்டுவை விட்டு வெளியேற முடியாது என்று சிலர் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியில் உள்ள காத்மாண்டு மக்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது.