இந்தியாவின் பொருளாதார தடை விதிப்புக்கு எதிராக நேபாள மாணவர்கள் போராட்டம்!
காத்மாண்டு: தங்களது நாட்டு மீது இந்தியா விதித்துள்ள அதிகாரப்பூர்வமற்ற பொருளாதாரத் தடைக்கு எதிராக நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அரசு உடனடியாக பொருளாதாரத் தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
நேபாள நாட்டில் அண்மையில் புதிய அரசியல் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்டது. உலகின் ஒரே இந்து நாடாக இருந்தபோதும் நேபாளம் மதச்சார்பற்ற அரசியல் சாசன அமைப்பைக் கொண்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்திருந்தது. மேலும் நேபாளத்தில் உள்ள இந்திய வம்சாவளியினராகிய மாதேஸிகள், புதிய அரசியல் சாசனத்தால் தாங்கள் இரண்டாந்தர குடிமக்களாக்கப்பட்டுவிட்டதாக கூறி போராட்டத்தில் குதித்தனர். இந்திய-நேபாள எல்லையில் மாதேஸிகள், இந்திய பகுதிகளில் இருந்து வரும் சரக்கு வாகனங்களை நேபாளத்துக்குள்ளே அனுமதிக்கவில்லை. மாதேஸிகள் நடத்திய போராட்டத்தில் மொத்தம் 50 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இதனால் நேபாளம் மிகக் கடுமையான நெருக்கடியை சந்தித்தது. இந்த அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையை இந்திய அரசே விதித்துள்ளதாக நேபாளம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனால் சீனாவிடம் இருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைப் பெற்று வருகிறது நேபாளம்.
இதனிடையே இந்தியாவின் இந்த மறைமுக பொருளாதாரத் தடையை கண்டித்து காத்மாண்டுவில் நேற்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். இந்திய அரசு, உடனடியாக பொருளாதாரத் தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.