ஒபாமாவை குரங்காகச் சித்தரித்த பெல்ஜியம் கார்ட்டூன்... வாசகர்கள் கண்டனத்தால் பரபரப்பு
பிரசெல்ஸ்: பெல்ஜியத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவை குரங்காக சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவில் மரிஞ்சுனா என்ற போதை பொருள் விற்க ஒபாமா அனுமதி வழங்கினார். அதனைக் கேலி செய்யும் வகையில், பெல்ஜியத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி ஆகியோரின் முகத்தை மனித குரங்கு போன்று வரைந்து செய்தி வெளியிட்டது.
மேலும், அந்தச் செய்தியில் இந்தப் புகைப்படத்தை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஒபாமாவுக்கு அனுப்பியதாக நகைச்சுவை தன்மையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அமெரிக்க அதிபரை இவ்வாறு குரங்கோடு இணைத்து செய்தி வெளியிட்டது வாசகர்களைக் காயப்படுத்தியது. எனவே, சமூக வலைதளங்களில் இதற்கு கண்டனக்குரல் வலுத்துள்ளது. அதில் இக்கார்ட்டூன் ஒபாமா மீதான இனவெறியை தூண்டுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அந்த பத்திரிகை தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளது. மேலும், தங்களது கார்ட்டூன் இன வெறியை துண்டுவதற்காக வெளியிடப்படவில்லை கேலி செய்யும் விதத்தில் தான் இக்கார்ட்டூன் வரையப்பட்டது என்றும் அப்பத்திரிக்கை விளக்கமளித்துள்ளது.